Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழு

சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. உபகுழு  ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம்தெரிவித்துள்ளது.

தடுப்புக்காவலில் உள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக் கூடிய பிற இடங்களில் உள்ள மக்களுக்கான சீர்திருத்தங்களையும் பாதுகாப்புகளையும் அதிகாரிகள் முறையாகச் செயற்படுத்தியுள்ளார்களா என்பதை மதிப்பிடுவதே இந்தக் குழுவின் வருகையின் நோக்கமாகும்.

“2019ஆம் ஆண்டில் நாங்கள் மேற்கொண்ட கடைசிப் பயணத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் தனது தேசியத் தடுப்புப் பொறிமுறையை நியமித்துள்ளது.

இது சித்திரவதைத் தடுப்பில் ஒரு முக்கியப் படியாகும் என்று சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுன் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

“தடுப்புப் பயணங்களை மேற்கொள்வதுடன்,, இந்தப் பொறிமுறையின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வதும், கடந்த ஆண்டுகளில் எங்கள் பரிந்துரைகளை அதிகாரிகள் எவ்வாறு செயல்படுத்தியுள்ளனர் என்பதை மதிப்பிடுவதும் எங்களின் பயணம் நோக்கமாக உள்ளது என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.

சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான எங்களின் கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா தடுப்புப் பொறிமுறையுடன் இணைந்து பணியாற்றுவதையும், கூட்டுப் பயணங்களை மேற்கொள்வதையும் நாங்கள் குறிப்பாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்ப நெறிமுறையில் இலங்கை 2017-ஆம் ஆண்டில் இணைந்தது.

இந்தப் பயணத்தின் போது, ஐ.நா சிறப்புக் குழுவின் பிரதிநிதிகள், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், தேசிய தடுப்புப் பொறிமுறையின் உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பிற ஐ.நா. முகமைகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

பயணத்தின் முடிவில், ஐ.நா உபகுழு தனது இரகசியமான பூர்வாங்க அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கும் தேசிய தடுப்புப் பொறிமுறைக்கும் சமர்ப்பிக்கும்.

அதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் குழு தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட ஒரு இரகசிய அறிக்கையை உறுப்பு நாடுகளுக்காகத் தயாரிக்கும்.

இலங்கை அதிகாரிகள் அதனைப் பகிரங்கப்படுத்தக் கோரும் வரை அந்த அறிக்கை இரகசியமாகவே இருக்கும்.

2019-ஆம் ஆண்டு இலங்கை பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஐ.நா உபகுழுவின் அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இலங்கை வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.