தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டம்: செயற்கை நுண்ணறிவின் பாதையில் நாட்டை வழிநடத்துதல் மற்றும் ஒரு மாபெரும் பாய்ச்சல்.
பிராந்திய மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) போட்டித்தன்மை வாய்ந்த சூழலில், இலங்கை ஒரு செயலற்ற பார்வையாளராக இருப்பதிலிருந்து மாறி, ஒரு தீவிரமான தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர், பொறியியலாளர் எரங்க வீரரத்ன வலியுறுத்தினார்.
லங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பினால் (LEARN) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்" உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த உயர்மட்ட மாநாட்டில் உயர்கல்வித் துறையைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள், தொழில்நுட்பத் துறைத் தலைவர்கள் மற்றும் சர்வதேச பங்காள அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரதி அமைச்சர் தனது உரையில், செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஆராய்ச்சி ஆய்வகங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அல்ல என்றும்; அது உலகப் பொருளாதாரம், பொதுச் சேவைகள் மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயப் போட்டித்தன்மை ஆகியவற்றின் மைய அச்சாக பரிணமித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஸ்டான்போர்ட் ஏஐ குறியீடு (Stanford AI Index) மற்றும் உலக வங்கி அபிவிருத்தி அறிக்கைகளின் (World Bank Development Reports) முக்கிய குறிகாட்டிகளை மேற்கோள் காட்டிய அவர், செயற்கை நுண்ணறிவானது வளரும் நாடுகளுக்கு பாரம்பரிய அபிவிருத்தி சவால்களை முறியடித்து முன்னேறுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் அதே வேளையில், சரியான நேரத்தில் மூலோபாய தலையீடுகளை செயல்படுத்தத் தவறினால், அது பணக்கார நாடுகளுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
உலகளாவிய அளவுகோல்களைப் பற்றி விரிவாக விளக்கிய பிரதி அமைச்சர், சிங்கப்பூர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அவற்றின் செயலூக்கமான மூலோபாய முடிவுகள் மற்றும் நீடித்த தேசிய அர்ப்பணிப்பு காரணமாக செயற்கை நுண்ணறிவுத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார்.
இலங்கை விதிவிலக்கான அறிவுசார் மூலதனம், முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பத் துறையைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கம், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மத்திய தேசிய அமைப்பைக் வரலாற்று ரீதியாக கொண்டிருக்கவில்லை என்றும், முன்மொழியப்பட்டுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் (National Artificial Intelligence Institute) இந்த முக்கிய இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த நிறுவனம், தற்போது நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவுவதுடன், ஆராய்ச்சியாளர்களுக்கு உயர் செயல்திறன் கணினி (HPC) உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர உள்ளூர்மயமாக்கப்பட்ட தரவுத்தொகுப்புகளை (datasets) பகிர்ந்துகொள்வதற்கான அணுகலையும் வழங்கும்.
மேலும், இலங்கையின் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இறையாண்மைமிக்க செயற்கை நுண்ணறிவுத் திறன்களை (sovereign AI capabilities) வளர்ப்பதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும், இது பொது நிர்வாகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒரு விரிவான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
தனது உரையை நிறைவு செய்த பிரதி அமைச்சர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனத்தின் வெற்றியானது ஒரு தனி அமைச்சினால் மாத்திரம் சாதிக்கப்படக்கூடியதொன்றல்ல எனத் தெரிவித்ததுடன், இதனைச் செயல்படுத்துவதற்கு அனைத்து பங்குதாரர்களுக்கிடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பும், ஒருமித்த கருத்தும் முற்றிலும் அவசியமான முன்நிபந்தனைகளாகும் என்பதையும் கோடிட்டுக் காட்டினா
கருத்துகள் இல்லை: