Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளுக்கு வழி காட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



2026 ஜூன் 18 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தின்போது, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, 2025 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் பாடநெறிசார் செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் பரிசில்களை வழங்கி வைத்தார். அத்தோடு, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ பாடசாலைப் பத்திரிகையான "ஆதர்ஷ பிரபா" இதழும் பிரதமரால் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.



நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இவ்வாறான பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இவ்வாறான பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் சந்திக்கும்போதே, நாட்டின் கல்வியை உயர் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற எமது உறுதிப்பாட்டை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற ஊக்கம் எமக்குக் கிடைக்கின்றது. பிள்ளைகளின் முகங்களில் மகிழ்ச்சி தவழும், அன்பு,பாதுகாப்பு நிறைந்த சூழலைக் கொண்ட பாடசாலைகளையே நாம் காண விரும்புகிறோம்.



ஒரு நாடு என்ற வகையில் எம் முன் பல சவால்கள் உள்ளன. நீண்ட காலமாக எமது நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கிய பின்னடைவை நாம் இப்போதே படிப்படியாகச் சீர்செய்து வருகின்றோம். உலகளாவிய ரீதியிலும் தட்பவெப்பநிலை ரீதியிலும் ஏற்படும் மாற்றங்கள் எமது நாட்டையும் பாதிக்கின்றன. ஆகையினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அந்தச் சவால்களை முறியடிக்கக் கூடியதாக இருக்கும்.

கல்வித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் அனைத்துத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இது பாடத்திட்ட அபிவிருத்தி மாத்திரமல்லாது, கல்வித் துறையின் மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் என, புதிய உலகிற்குத் தேவையான திறன்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் பரந்த அளவிலான ஒரு செயற்பாடாகும். எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகள் நமக்காக திறந்துள்ளன என்ற எண்ணத்தையும், அவர்களின் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்திலும் கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலுடன் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று, ஆசிரியர் பயிற்சிச் செயல்முறையை மிகவும் பலமான முறையில் மேற்கொள்வதன் மூலம், மாணவர்களுக்குப் பயனுள்ள கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும், என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி ஆரம்பப் பாடசாலையிலும் பிரதமர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அத்தோடு, மஹவ, ரிதிபெந்திஎல்ல, கஜநெக்கம மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் செய்த பிரதமர், அப்பாடாசாலை ஆசிரியர் குழாமினருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அப்பகுதி மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களுக்குத் தனது கௌரவத்தையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய மற்றும் கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக குணசேன, கீதா ஹேரத், குருணாகல் பிரதேச சபை தலைவர் எம்.ஏ. விமலசிறி, மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு
எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.