Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வஞ்சிக்கும் அரசாங்கமும்; அரசியல் போர்வைக்குள் மறைத்திருக்கும் ஒட்டுண்ணிகளின் துரோகமும்....


நியாயப்படுத்தலுக்கும் கருத்து வேறுபாட்டுக்கு மிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.


✔️நியாயப்படுத்தல் என்பது ஒரு விடயத்தை சரி காண்பதை குறிக்கும்.
✔️கருத்து வேறுபாடு என்பது ஒரு விடயத்தை கையாள்வதில் இருக்கும் வேறுபட்ட அனுகுமுறைகளை குறிக்கும்

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில் கூறப்படும் நியாயாப்படுத்தல்கள் - இரண்டு தரப்பினரிடமிருந்தே வருகின்றன.
01) அரச தரப்பிலிருந்து - விஞ்ஞானரீதியிலான நிறுவல்களுக்கு மாற்றமானதாக வருகின்றன
02) அரச ஒட்டுண்ணிகளிடமிருந்து - ஏற்றுக்கொள்ளவே முடியாத நொண்டிச்சாட்டுக்களாக வருகின்றன

இந்த இரண்டும் வன்மத்திலிருந்து பிறந்தவைதான்;
✔️அரச தரப்பின் இனரீதியிலான வன்மத்திலிருந்து பிறக்கிறது. 
✔️ஒட்டுண்ணிகளின் அதிகாரம் சார்ந்த வன்மத்திலிருந்து பிறந்திருக்கிறது

ஒரு இனத்தின் மத உணர்வுகளை வஞ்சிக்கின்றோம் என்ற எந்த உறுத்தலும் இல்லாமல் - அரச தரப்பு இந்த விடயத்தை வக்கிரமாகக் கையாள்கின்றது. அதே நேரம், தம் இனத்தின் மத உணர்வுகள் வஞ்சிக்கப்படுகின்றன என்ற உறுத்தலே இல்லாமல் - ஒட்டுண்ணிகள் இதை நியாயப்படுத்துகின்றன. 

இதில், தம் மத உணர்வுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை நியாயப்படுத்தும் "துரோகத்தை" - அரசியல் என்ற போர்வைக்குள் ஒழிந்து செய்துகொண்டிருக்கும் இந்த ஒட்டுண்ணிகளே மிக்கொடுமையானவர்கள். 

ஏன்எனில், முன்பு கூறியதை போன்று - இவர்கள் கருத்துவேறுபாட்டிற்குள்ளிருந்து முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தைப் பார்க்கவில்லை. மாறாக, நியாயப்படுத்தலுக்குள்ளிருந்து  மற்றவர்கள் மீது விரல் நீட்டி தப்பித்துக்கொள்கின்றனர். 

எதிர்க்கட்சியாக இருக்கும் முஸ்லிம் தலைமைகள் தவறு என்றே வைத்துக்கொண்டாலும் - அவர்கள் மீது அரசாங்கம் கோபத்தில் இருக்கிறது என்றே எடுத்துக்கொண்டாலும் - அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் இவர்களின் பங்கு என்ன? 

இவர்களின் கதைகளுக்குப் பின்னால் சென்று - கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த அரசிற்கு சுமார் 5,00,000 (ஐந்து இலட்சம்) வாக்குகளை அள்ளி வழங்கிய - முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு இவர்கள் முன்வைக்கும் நியாயம்தான் என்ன? 

அவர்கள் கூறுவதைப் போன்று முஸ்லிம் தலைமைகள் விட்ட தவறுகளுக்காக - ஒட்டு மொத்த சமூகத்தையும் வஞ்சிக்கலாமா / பழிதீர்க்கலாமா? இன்றைய அரசாங்கம் அமைந்தால் நாங்கள்தான் "ராசாக்கள்" என்று அடித்த இவர்களின் தம்பட்டம் என்னவாயிற்று? இந்த அரசிடம் இவர்களின் சொல்லுக்கான பெறுமானம் என்ன?

இவர்களால் இந்த அரசிடமிருந்து ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுப்பது மட்டுமல்ல;
✔️சாய்ந்தமருதிற்கான சபையை பெற்றுத்தர முடியவில்லை
✔️ஒரு முஸ்லிமையாவது அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள சொல்ல முடியவில்லை
✔️முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க பிரேரணை சமர்ப்பித்ததை தடுக்க முடியவில்லை
✔️பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை 12.5% ஆக உயர்த்தும் முயற்சியை தடுக்க முடியவில்லை
✔️முஸ்லிம்களின் ஏற்றுமதி பொருளாதாரம் நசுக்கப்படுவதை தடுக்க முடியவில்லை
✔️ஒரே ஒரு முஸ்லிம் GA (வவுனியா) பறிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை
✔️மகர பள்ளிவாசலில் சிலைவைத்து விடுதியும் அமைக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை
✔️முஸ்லிம்கள்தான் இந்த நாட்டிற்கு கொரோனாவை கொண்டு வந்ததை போன்ற மாயையை உருவாக்குவதை தடுக்க முடியவில்லை
✔️முஸ்லிம்கள்தான் ஊரடங்கை அதிகம் மீறும் தேசப்பற்றற்றவர்கள் என்று காட்டுவதை தடுக்க முடியவில்லை
✔️கொரோனாவால் முஸ்லிம் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் - அக்கிராமத்தையே மூடுகின்றமையை தடுக்க முடியவில்லை
✔️அரசினால் நியமிக்கப்பட்ட "கொரோனா நடவடிக்கை குழுவில்" ஒரு முஸ்லிமை கூட நியமிக்க செய்ய முடியவில்லை
✔️முஸ்லிம் பெரும்பான்மை கிராமங்களை Lockdown செய்யப்பட்ட நிலையில் தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றமையை தடுக்க முடியவில்லை - என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 

இவற்றில் ஒன்றையாவது செய்து காட்டிவிட்டு - எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் தலைமைகளில் குற்றம் கண்டிருப்பார்களானால் - அதில் நியாயம் இருந்திருக்கும். ஒன்றையுமே புடிங்க முடியவில்லை. இவர்களால் மட்டுமல்ல - எவராலும் புடுங்கும் சூழ்நிலை இன்றைய அரசில் இருக்காது என்பதை உணர்ந்துதான் - முஸ்லிம் தலைமைகள் தூரமாகி நின்றன என்பதை இப்போது உணர்வார்கள்.

இது கடும்போக்கு இனவாதத்தின் மீது வேர்க் குற்றியுள்ள அரசு. தமிழர்களை நசுக்கிய சுகானுபவத்தை - முஸ்லிம்களிலும் பிரயோகிக்க இவர்கள் முனைவதை - 2012 இல் இருந்து மிகத்தெளிவாக அவதானிக்க முடிகிறது. இவர்களின் (மகிந்த) கடந்த ஆட்சியில்  "கண்ட ருசியில்" - நாக்கு ஊறிய ஒட்டுண்ணிகளின் நிலைப்பாட்டையே - மற்றவர்களும் எடுக்க வேண்டுமென்று நினைப்பது தவறானது.

இந்த ஒட்டுண்ணிகளோடு இப்போது சமூகமும் இல்லை. அரசும் இல்லை. "அரசனைக் கண்டு புருசனை கைவிட்ட கதை" இவர்களின் கதை. இனியாவது ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து - புதைக்கப்படுவதற்கு என்ன செய்யலாம் என்பதற்கு - எல்லோரும் இணைந்த செயற்பாட்டு பொறிமுறை ஒன்றை உருவாக்க இவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

இந்த சமூகத்தின் ஆன்மாவின் வலியை களைய முன்வர வேண்டும் . இவர்களின் நியாயப்படுத்தல் எனும் துரோகத்தை - கருத்து வேறுபாடு என்ற அரசியல் போர்வைக்குள் மூடிக்கொள்ளும் தந்திரத்தை கைவிட வேண்டும். நொண்டிச்சாட்டுக்களை கூறி இனியும் சமூகத்தை ஏமாற்றுவதை அல்லாஹ் பொறுத்துக்கொள்ள மாட்டான். அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும்

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்

ஏ.எல். தவம்.
முன்னாள் மாகானசபை உறுப்பினர்.
வஞ்சிக்கும் அரசாங்கமும்; அரசியல் போர்வைக்குள் மறைத்திருக்கும் ஒட்டுண்ணிகளின் துரோகமும்.... Reviewed by www.lankanvoice.lk on மே 07, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.