Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும்



டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும்

வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள்

13 வருடக் கல்வியை நிறைவு செய்யாமல் எந்தப் பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது

சிறந்த மனித உறவுகளுடன் பொருளாதார அபிவிருத்தியும் கொண்ட ஒரு சமூகம் நமக்குத் தேவை

– ஜனாதிபதி

 

டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் சேதமடைந்தன. மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் கண்டி, உடபலாத பிரதேச சபைப் பகுதியில் 06 மதத் தலங்கள் முழுமையாக சேதமடைந்ததுடன் 15 மதத் தலங்கள் பகுதியளவு சேதமடைந்தன். அவற்றை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் சூறாவளியால் சேதமடைந்த தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

டித்வா சூறாவளியால் சுமார் 1,350 மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கிராமங்கள், விகாரைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் நிலைநாட்ட இந்த மதத் தலங்களை விரைவாக மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை

நமது நாடு அண்மையில் ஒரு பாரிய பேரழிவைச் சந்தித்தது. அந்தப் பேரழிவு அண்மைய இலங்கை வரலாற்றில் மிகப் பாரிய இயற்கை பேரழிவாகும். சுமார் இரண்டாயிரம் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன. ஏராளமான மனித உயிர்களையும் இழந்தோம். அதிகளவான சொத்துகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தோம்.

எனவே, நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், அரசாங்கம் என்ற வகையில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என்ற வகையில் நம் அனைவருக்கும் ஒரு சவால் இருந்தது. இன்று அந்த சவாலை நாம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வென்றுவிட்டதாக நான் நினைக்கிறேன். நாம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும். மீண்டும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

மக்கள் தமது கிராமங்கள், விகாரைகள் மற்றும் மதத் தலங்களுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். மக்களின் வாழ்க்கை முழுமைபெற, அந்த மதத் தலங்கள் சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கையுடனான அவற்றின் உறவு பேணப்பட வேண்டும். தற்போது,சுமார் 1350 மதத் தலங்கள் பல்வேறு வகையில் சேதமடைந்துள்ளன. எனவே, கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையிலான உறவை பொது மக்களின் வாழ்வில் வலுப்படுத்தும் வகையில், இந்த மதத் தலங்கள் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் இந்த வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

கிராமப்புற விகாரைகள் மிகுந்த சிரமத்துடன் பராமரிக்கப்பட்டு வருவதாக நமது தேரர் குறிப்பிட்டார். அந்த கிராமப்புற விகாரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதற்கான விரைவான திட்டத்தைத் தொடங்க புத்தசாசன அமைச்சு மூலம் நாம் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் எமக்கு ஒரு ஆய்வு அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கையின்படி, மத்திய மலைநாட்டின் கடந்த கால நிலை, நிகழ்கால நிலை, இது தொடர்ந்தால் எதிர்காலம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மண் அடித்துச் செல்லப்பட்டு, பாறைகள் மட்டுமே வெளிப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டில் உள்ள பல நீர்த்தேக்கங்கள் வண்டல் மண்ணால் நிரம்பி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றவும், அதன் கீழ் ஒரு அதிகாரசபையை நிறுவவும் முடிவு செய்துள்ளோம். மேலும், மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய அதிகாரசபை நிறுவப்படும். அதன்படி, மத்திய மலைநாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை விரைவாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

இந்தப் அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான பொருளாதார சூழலையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமூக சக்தி திட்டத்தின் கீழ் இதற்காக 24,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.

மேலும், வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமானது. மாகாண மட்டத்தில் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த ஆண்டு 24,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது. மேலும், மாகாண சபைகளுக்கும் 8,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளோம். உள்ளூராட்சி நிறுவனங்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த வீதி நிர்மாணிப்புக்காக ஒதுக்கியுள்ளன. எனவே, வீதிகளை புனரமைக்கும் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த மாதம் பெப்ரவரி 10 ஆம் திகதி சம்பளம் பெறும்போது, தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் ஒரு நாளைக்கு 1,750 ரூபா சம்பளம் பெறுவார்கள்.

இதை மேலும் அதிகரிக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் இது இலங்கையில் முதல் முறையாக நடக்கிறது. இந்த 400 ரூபா நாளாந்த சம்பள உயர்விலிருந்து 200 ரூபாவை ஏற்க
அரசாங்கம் முடிவு செய்தது. ஏனென்றால் அந்த நிறுவனங்களை முற்றிலுமாக வீழ்ச்சியடையச் செய்து நாம் முன்னேற முடியாது. எனவே, நாங்களும் பங்களிப்பு செய்து அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதுதான் ஆரம்ப கட்டம். தோட்டங்களைப் பாதுகாப்பதும், அங்கு பணிபுரியும் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதும் எமது எதிர்பார்ப்பாகும்.

மேலும், கிராமப்புற வறுமையை ஒழிப்பது எமது முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும். அவர்களுக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு, ஏராளமான சிறு மற்றும் நடுத்தர கடன் திட்டங்களை நாங்கள் தயாரித்து, அவற்றுக்காக 96 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.

மேலும், வறுமையில் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற வீடு இல்லை. இந்த ஆண்டு 31,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கியிருந்தோம். மேலும், டித்வா அனர்த்தம் காரணமாக, சுமார் 20,000 புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த ஆண்டு 51,000 புதிய வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அரச பொறிமுறையின் தலையீட்டால், இந்த முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த இலக்குகளை அடைய பிரதேச செயலாளர்களின் ஆதரவும் அவசியம்.

மேலும், கிராமப்புற வறுமையை ஒழிப்பதில், கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தம் நமக்குத் தேவை. கிராமப்புற மக்களை சுழற்சி வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான முக்கிய வழி கல்விதான். அதனால் நாங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள்.

சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் சுமார் 74% பேர் 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்காதவர்கள். அவர்கள் குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களில் தொடர்புபட்டுள்ளனர். எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும். சாதாரண தரப் பரீட்சைக்குப் பிறகு, அவர்களில் பெரும்பாலோர் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். சிலர் க.பொ.த உயர் தரத்திற்குத் தோற்றுகிறார்கள், அதில் சித்திபெற்ற பிறகு, ஒரு குழு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறது. அதுதான் நம் நாட்டின் கல்விப் பாதை.

ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த கல்விப் பாதை அதுவல்ல. ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. இன்று நாங்கள் ஒரு
திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். பிள்ளை பாடசாலைக்கு வரவில்லை என்றால், பிள்ளை பாடசாலைக்கு வரவில்லை என்று பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிகாரிகள் குழு நியமிக்கப்படும்.

ஒரு பிள்ளை தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால், அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை அந்த அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். 13 ஆண்டுகள் கல்வி கற்காமல் ஒரு பிள்ளை கூட பாடசாலையை விட்டு வெளியேற முடியாது. அதுவே எமது எதிர்பார்ப்பு. மேலும், கல்வி மறுசீரமைப்புகளில் பல முக்கியமான விடயங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். பாடத்திட்டத்தின் பழைய தன்மையை நவீன உலகின் புதிய அறிவுடன் இணைத்து, கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்போது,1-5, 6-9, 9-11, 11-13 என்ற 04 பிரிவுகளின் கீழ் செயற்படவுள்ளோம். அந்த 04 பிரிவுகளுக்குள் தொடர்ச்சி உள்ளது.

இந்தக் கல்வி மறுசீரமைப்பின் கீழ் 2032 ஆம் ஆண்டு முதல் பிள்ளை உருவாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, 2032 ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இதற்காக, சட்டத்தில் திருத்தம் செய்யவும், விரிவுரையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும், தேவையான உபகரணங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். முதல் முறையாக, தொழிற்பயிற்சி கல்விக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.

இதற்கிடையில், எந்த நேரத்திலும் ஏதாவது செய்யக் காத்திருக்கின்றவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் மிகவும் தவறான கருத்துகளை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். வீதி அமைக்கும் போது அப்படிச் செய்தால், வீதியை அமைப்போம். அது அகற்றப்படாது. ஆனால் இது பிள்ளைகளின் கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பதால், ஒரு குறிப்பிட்ட குழுவினரிடையே சந்தேகங்களை வைத்து இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது. எனவே, அடுத்த ஆண்டு 06 ஆம் ஆண்டு தொடர்பான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பெற்றோரின் முழு நம்பிக்கை தேவை. எனவே, பொதுமக்களின் முழு நம்பிக்கையுடன் இதை செயல்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். 06 ஆம் ஆண்டு தொடர்பான மறுசீரமைப்புகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன, மேலும் அதற்கான ஒரு பாரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பெற்றோருடனான சந்திப்புகள் உள்ளடங்கும்.

நமக்கு கருணை உள்ள நல்ல பிரஜை தேவை, உலகை வெல்லக்கூடிய ஒரு பிரஜை அவசியம். மேலும், தனது குடும்பத்தை கட்டியெழுப்பக்கூடிய பிள்ளை நமக்குத் தேவை. வறுமை என்பது தான் பெறும் கல்வியின் அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இந்த கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்று கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதாகும்.

இன்றைய சமூகத்தில் உள்ள அனைத்து மனித உறவுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி கண்டுவிட்டன. நமக்கு சிறந்த மனித உறவுகள் கொண்ட ஒரு சமூகம் தேவை. அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற வரும் மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு – இந்த உறவுகள் அனைத்தும் இன்று பல சவால்களைச் சந்திக்கின்றன. இந்த நாட்டை சமூக ரீதியாக கட்டியெழுப்ப, இந்த சிறந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் பேணப்பட வேண்டும். இந்த விடயத்தில், மகா சங்கத்தினருக்கும் மதத் தலைவர்களுக்கும் உள்ள பங்கு மிகவும் மகத்தானது.

மேலும், நமது தேரர் குறிப்பிட்டது போன்று, நல்லிணக்கத்துடன் சமூகத்திற்கு நல்ல விடயங்களைக் கொண்டு வரும் ஒரு தலைமுறை மதத்தலைவர்கள் நமக்கு அவசியம். இன்று, சமூகத்தில் மோதல்களை உருவாக்கும் குழுவாக இல்லாமல், சமூகத்தை நல்ல திசையில் வழிநடத்தும் மதத் தலங்களின் தேவை உள்ளது. அதற்காக நமது மகா சங்கத்தினர் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களின் பணிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும் Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.