Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஸஹ்ரானிஸ்டுகளால் நாம் வீண்பழி சுமத்தப்பட்டுவிட்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது பொய்யாகிவிடாது.

சுவர்ணவாஹினியின் ரதுஇர நிகழ்ச்சியில் 1915ம் ஆண்டில் நடைபெற்ற இன வன்செயல்களுடன் முஸ்லிம்களையும் வாள்களையும் தேவைக்கதிகமாகவும் தேவையில்லாமலும் பேசியதில் விஜேதாச ராஜபக்ஷ் மீது விமர்சம் இருக்கின்றது.


அமைச்சர் ரஊப் ஹகீமின் வாள்கள் தற்காப்புக்கானவை' என்ற கூற்றையும் சவாலுக்கு உட்படுத்தி கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.

தற்காப்புக்கு வாள்கள் ஏன் அவசியம் என்ற  கேள்விக்கு அமைச்சர் ஹகீம் சுற்றிச்சுற்றி விளக்கம் கொடுத்ததிலும் விமர்சனங்கள் எமக்குண்டு


பள்ளிகளையும் முஸ்லிம்களின் வீடுகளையும் தாக்கிய, தாக்க வருகிருகின்ற  பயங்கரவாதிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வாள்கள் போதாதுதான், துப்பாக்கிகளே வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை வாங்குவதற்கோ வைத்துக்கொள்வதற்கோ இலங்கையில் சட்டபூர்வமான வாய்ப்புமில்லை அனுமதியுமில்லை, ஆதலால் தடை செய்யப்படாத வாள்களை வைத்திருந்தார்கள். அதில் என்ன குற்றம்? என்று துணிவாய் கேட்டிருக்கலாம்.

மேலும், கைப்பற்றப்பட்ட வாள்களால் எவருக்கும் எந்த ஆபத்தை விளைவித்ததாக எந்த முறைப்பாடுமில்லை.

ஆகவே வாள்களை வைத்திருந்ததை பாரிய விடையமாக பரப்பத்தேவையில்லையென கூறியிருக்கவேண்டும்.


மக்கள் பிரதிகளை பாதுகாப்பதற்கு உயிர்களை ஒரேயடியாக கொல்லக்கூடிய கைத்துப்பாகிகளையும் குண்டு துளைக்காத வாகனங்களையும் அரசாங்கமே கொடுக்கும் நாட்டில் தனிமனிதன் தன்னையும் தனது குடும்பம், வழிபாட்டுத்தலங்களை பாதுகாப்பதற்கு காயத்தை ஏற்படுத்தக்கூடிய வாள்களை வைத்துக்கொள்வதை எங்கணம் குற்றம் காணலாம்? என்று எதிர்கேள்வி கேட்டிருக்கவேண்டும்


கேள்விகளுக்கான பதில்கள் நேர்த்தியாயிருக்க வேண்டும் சமாளிப்பது பதில்களாகாது அதுவொரு தப்பித்தல் தலைவர்களுக்கு தகுந்ததல்ல


சிலவிடையங்கள் கசப்பாயிருந்தாலும் சரியான நிலைப்பாடுகளில் தளர்ச்சியடைய தேவையில்லை.


1989 தேர்தல் பிரச்சாரங்களின் போது இலங்கை இராணுவத்தில் "ஜிஹாத் ரெஜிமெண்ட் ஒன்றை நிறுவி முஸ்லிம்களையும இராணுவத்தில்  இணைத்து அவர்களின் மத கலாச்சார அடையாளங்களுடன் பணியில் ஈடுபட அனுதிக்கவேண்டும்" என்று மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் பரப்புரை செய்துவந்தார்கள்


தேர்தலெல்லாம் முடிந்து மர்ஹூம் அஷ்ர்ஃப் எம்.பியாக இருக்கும் போது ஜனாதிபதி பிரேமதாஸவின் சுச்சரித்த இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில் மேற்சொன்ன விடையத்தை சுட்டிக்காட்டி அந்த வேளையில் பாதுகாப்புக்கு பொறுப்பாயிருந்த அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன மர்ஹூம் அஷ்ரஃபுடன் கடுமையாக முரண்பட்டார்.


நிலைகுலையாமல் மர்ஹூம் அஷ்ரஃப் இவ்வாறு கூறினார்.


"இலங்கையிலுள்ள இராணுவ ரெஜிமணட்கள் எல்லாம் சிங்கள பெயர்களையும் சிங்கள கலாச்சாரத்தையும் பின்னணியாய் கொண்டவை.

இந்நாட்டு முஸ்லிம்களையும் இராணுவத்தில் இன்னும் அதிகமாய் உள்வாங்கி நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு முஸ்லிம்களும் பங்களிப்புச் செய்ய அவர்களின் மத,கலாச்சார, அடையாளங்களை அனுமதிக்கும் ஜிஹாத் ரெஜிமெண்ட் ஒன்றை ஸ்தாபிப்பதில் தவறில்லை என உறுதியாக கூறிவிட்டாச்.


இவ்விவாதத்தை உன்னிப்பாய் அவதானித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி பிரேமதாஸ அஙர்கள்

"முஸ்லிம்களை இலங்கை இராணுவத்தில் இணைய ஊக்கிவிக்கலாமே, ஏன் தனியான பிரிவு தேவை"யென்று சாதாரணமாய் கேட்டார்.


"முஸ்லிம்களில் சிலர் தாடி வைப்பதை விரும்புவர். தாடியை முழுமையாக மழிக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் வெள்ளிக்கிழமைகளிளாவது கூட்டுத்தொழுகையில் ஈடுவடுவார்கள், இதுவெல்லாம் இப்போது இருக்கும் ரெஜிமெண்ட்களில் சாத்தியமில்லை.

ஆதலால்தான் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனியாக இருக்கும் 

சீக் ரெஜிமெண்ட் போல் இலங்கையில் முஸ்லிம்களுக்காக ஜிஹாத் ரெஜிமெண்டை ஸ்தாபியுங்கள்" என்றார்.


மேலும் தாம் போரிடும் யுத்த களத்திலேயே தம்மில் ஒருவரை இமாமாக்கி ஜூம்மாவையும் தொழுவார்கள், வாய்ப்பு அமைந்தால் மற்றைய தொழுகைகளையும் கூட்டாய் தொழுவார்கள்.

ஜிஹாத் என்ற பெயர் பிடிக்கவில்லையாயின்   PEACE Regiment என்று பெயரை வைத்துக்கொள்ளலாம் என்றார்.


இங்கு இதை ஏன் மீட்கிறேன் என்றால் ஏதோவோர் வடிவில்/வழியில் முஸ்லிம்களின் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் எந்த கட்டத்திலும்  நிலை தடுமாறவில்லை என்பதை ஞாபகப்படுத்தவற்கேயாகும்.

அவ்வாறே முஸ்லிம்களின் பாநுகாப்பு விடையத்தில்  வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராயிருந்த சேகு இஸ்ஸதீன் இன்னும் சில படிகள் தாண்டினார்.

பின்னர் அவர் விமர்சனத்துக்குள்ளானார்

அதை வேறோர் பதிவில் பேசுவோம்.


ஸஹ்ரானிஸ்டுகளால் நாம்  வீண்பழி சுமத்தப்பட்டுவிட்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது  பொய்யாகிவிடாது.


எமது பாதுகாப்பு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பாதுகாப்பை உத்தவாதப்படுத்தவேண்டிய தேவை மேலும் அதிகரித்துள்ளது


பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகள் அடியோடு இல்லாமலாகவில்லை.


தற்கொலைதான் செய்யவேண்டும் என்றில்லை ஒரு தீக்குச்சி போதும் முழு நாட்டையும் எரித்துவிடும்.


அந்த பழியையும் முஸ்லீம்களின் தலைகளில் கட்டிவிடலாம்.


ஆக, தற்பாதுகாப்பை தப்பாக எந்த சட்டமும் கூறவில்லை. இதை அமைச்சர் ரஊப் ஹகீம் ரது இர நிகழ்ரியில்  மீண்டும் வலியுறுத்தியிருக்கலாம்.


இதுதவிர மற்றைய கேள்விகளை அவர் கையாண்ட விதம் அறிவு பூர்வமானது.

அல்குர் ஆனின் தவறாக மேற்கோள் காட்டப்படும் வசனங்கள்  பற்றிய அவரது தெளிவான விளக்கம் சிலாகிக்க தக்கவை.


1915  வரலாற்றை தேவைக்கதிகமாய்  பேசி ஒரு உளவியல் குரோதத்தை உசுப்பியது தவிர்ந்த விஜேதாஸ ராஜபக்ஷவின் சர்வதேச வல்லாதிக்க போட்டியில் இலங்கை மீதான பல்முனைக் குறி பற்றிய கருத்துக்கள் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு இலங்கை பிரஜையும் அறிந்திருக்க வேண்டியவையே!


ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாய் காட்டுவதற்கான ஏத்தனிப்புக்களை சாமர்த்தியமாய் கையாண்டதற்காய் இருவரையும் பாராட்டலாம்


நிற்க,

முஸ்லிம் சமூகத்தை ஊடகப்பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கையில்  அனைத்து அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு மும்முரம் காட்ட வேண்டும். 

சமாதானத்தை விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஊடகப்பயங்கரவாதத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் முயற்சிகளை அவசரமாக்க வேண்டும்.


அமைச்சரவையில் ஆலோசிக்கவேண்டும்,

காத்திரமான வழிவகைகளை கண்டறிய வேண்டும்,

தேவையேற்படின் ஊடக தணிக்கையை அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.


அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், கவர்னர் ஹிஸ்புழ்ழாஹ் போன்றோர் மீதான காழ்ப்புணர்ச்சிகளை ஊடக சுதந்திரம் என்ற பெயரில் வாந்தியெடுத்துக்கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையே குற்றம் சுமத்த முனையும்  கேவலமான ஊடகத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்யவேண்டும்.

-வஃபா பாறுக்-

ஸஹ்ரானிஸ்டுகளால் நாம் வீண்பழி சுமத்தப்பட்டுவிட்டோம் என்பதற்காக பேரினப்பயங்கரவாதிகளால் எமது பள்ளிவாசல்களும் அப்பாவி உயிர்களும் சூறையாடப்பட்டது பொய்யாகிவிடாது. Reviewed by www.lankanvoice.lk on மே 11, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.