Home
Unlabelled
Fwd: என்னால் புரிந்துகொள்ள முடியுமான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை கொடுங்கள்.நான் படிக்க ஆசைப்படுகிறேன்-சபரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்க தெரிவிப்பு
Fwd: என்னால் புரிந்துகொள்ள முடியுமான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை கொடுங்கள்.நான் படிக்க ஆசைப்படுகிறேன்-சபரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்க தெரிவிப்பு
எம்.எல்.எஸ்.முஹம்மத்
இரத்தினபுரி
பாதுகாப்புப் பிரச்சினைகள் என்பது என்றும் முற்றுப் பெறாது.அது தொடர்ந்து நிலவும் ஓர் பிரச்சினையாகும்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களிட்கு முன்னரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருந்துள்ளன.இதனால்தான் எமது சபரகமுவ மாகாண பாடசாலைகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எமது அதிபர்களை நாம் முன்கூட்டியே அறிவுறுத்தியிருக்கின்றோம்.ஆனால் இப்போதுதான் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் சரியாக புரிந்துகொண்டுதான் முன்நோக்கி நகர வேண்டியுள்ளோம் என சபரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்கா இரத்தினபுரியில் இன்று(28) தெரிவித்தார் .
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளின் போது பாடசாலை அதிபர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று(28)இடம் பெற்ற விஷேட கூட்டத்தில் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஆளுநர் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் திஸாநாயக்க தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்
"நாட்டில் இப்போது முஸ்லிம் சமூகம் மாத்திரம் பீதியில் வாழவில்லை.இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களைச் சார்ந்த மக்களும்தான் பீதியுடன் வாழ்கின்றார்கள்.கடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் உண்மையான முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என்னால் புரிந்து கொள்ள முடியுமான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு நூலொன்றை கொடுங்கள்.நான் அதனை ஆசையுடன் படிக்க விரும்புகிறேன்", எனவும் அவர் தெரிவித்தார்.
சபரகமுவ மாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற இவ்விஷேட கூட்டத்தில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய,மாகாண கல்விப் பணிப்பாளர் குறுப்பு ஆராய்ச்சி,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்ளார் எம்.யஹ்யா மற்றும் மாகாண சர்வமதத் தலைவர்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக வருகை தந்திருந்த அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்ட ஆளுநர்
"எந்த சந்தர்பத்திலும் யாரையும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ள தள்ள முற்பட வேண்டாம்.பாடசாலைகளில் நியமிக்கப்படக் கூடிய பாதுகாப்புக் குழுக்களை அதிபர்களே வழிநடத்த வேண்டும்.முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பாடசாலைகளின் அதிபர்கள் தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உருவாகுமாயின் உடனடியாக நீங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.அவ்வதிகாரிகளும் உரிய முறையில் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்காத போது அது பற்றி எமக்கு தெரியப்படுத்துங்கள்.நாங்கள் அப்பிரச்சினைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்த தயாராகவுள்ளோம்",எனவும் ஆளுநர் திஸாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது பாடசாலைகளில் கடைபிடிக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக சர்வ மதத் தலைவர்கள் தமது கருத்துக்களை தெளிவுபடுத்தியதுடன் இஸ்லாமியப் பெண்களின் ஆடை ஒழுங்குகள் தொடர்பாக கேகாலை மாவட்ட ஜெம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்ஹ் அக்றம் ஜுனைத் அதிபர்களுக்கு விளக்கமளித்தார்.
இரத்தினபுரி மாவட்ட ஜெம்மியத்துல் உலமா சபைச் செயலாளர் அஷ்ஷேய்ஹ் றிபா ஹஸன் மாகாண ஆளுநருக்கு அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா வெளியிட்ட அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்புப் பிரதியொன்றையும் இதன்போது கையளித்தார்.
Fwd: என்னால் புரிந்துகொள்ள முடியுமான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை கொடுங்கள்.நான் படிக்க ஆசைப்படுகிறேன்-சபரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்க தெரிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 29, 2019
Rating: 5
கருத்துகள் இல்லை: