தகுதியான தலைமைத்துவத்தின் வறுமைநிலையை எமது சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவரின் அறிக்கையில் மேலும் தொடர்வதாவது,
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது.
உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்குரிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டவேளையில் உலமா சபை, அரசியல் கட்சிகள் இன்னும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்மொழிவுகளை சமர்ப்பித்து தங்களால் முடிந்த பங்களிப்புகளை செய்திருந்தது.
ஐரோப்பிய சங்கத்தினைடைய வரிச் சலுகைகளுக்குகூட இது மிகப்பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது. இறுதியில் அரசியல் இழுபறிகளால் இன்றுவரை கிடப்பில் உள்ள சட்டதிருத்தம் ஒட்டுமொத்தத்தில் “ஓர் இலங்கை ஓர் சட்டம்” என்ற தொணிப்பொருளில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டக்கோவையே இல்லாமல் செய்யப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஏற்பட்ட 21.4.2019 சம்பவம் என்பது இத்தனைகாலமும் முஸ்லிம்களுக்கெதிராக புரையோடிப்போய்கிடந்த அத்தனை காழ்ப்புணர்வுகளையும் கட்சிதமாக அரங்கேற்றுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தலைவர் அஷ்ரப் வரையிலான அரசியல் தலைமைகள் உரிமைக்காக போராடி வெற்றி கண்டபோதிலும் அவருக்கு பிந்திய காலத்தில் முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் எதிர்பார்ப்பாக அபிவிருத்தியே முன்னிலைப்படுத்தப்பட்டது. றோட்டுப் போட்டால் வோட்டுப் போடுவொம் என்கின்ற கோசம் அதிகமான பிரதேசங்களில் உருப்பெற்றதால் அந்தந்த பிரதேச குறுநில மன்னர்கள் தமது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ள அபிவிருத்தி என்கின்ற மாயையை தமது அரசியல் மூலதனமாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
அபிவிருத்திக்காகவும் தனிப்பட்ட சலுகைகளுக்காகவும் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசியல் பெரும்பான்மை சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களிற்கெதிராக கட்டவிழ்த்துவிடுவதற்கு வழிவகுத்தது.
இதனுடைய ஒட்டுமொத்த விழைவு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்றிருந்த தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கான விசேட சலுகைகள் எல்லாம் இல்லாதொழிக்கப்படுகின்ற ஓர் நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
கட்சி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து அல்லது அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து முன்னிலைப்படுத்தப்பட்ட தலைமகள் 21.04.2019 சம்பவத்திற்குப் பிறகு சமூகம் சார்ந்து பேச வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கின்ற ஆதாரப்பூர்வமான அல்லது ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதிலேயே தமது காலத்தை கழிந்துகொண்டிருக்கின்றார்கள்.
தகுதியான தலைமைத்துவத்தின் வறுமைநிலையை எமது சமூகம் 21.04.2019 இற்குபிறகு மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது அந்த வகையில் இலங்கையில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தன்னந்தனியாக நின்று நாட்டிற்குள்ளும் சர்வதேசத்திற்கும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுக்கின்ற ஓரே ஓர் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவர் கௌரவ அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் திகழ்கின்றார் என்றால் அதை இலங்கை முஸ்லிம்கள் நிராகரிப்பதற்கு தனிப்பட்ட காரணத்தைத்தவிர வேறு எந்த நியாயமான காரணத்தையும் முன்வைக்க முடியாது.
புலிகளால் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை எமது சமூகம் ஆவணப்படுத்த தவறிவிட்டது என்கின்ற மிகப்பெரிய ஓர் குறை இன்றுவரை நீண்டுகொண்டுதான் இருக்கின்றது.
அன்று குருக்கல்மட புதைகுழி தோண்டுகின்ற விடயத்திலும் பெரும்பான்மை கட்சியின் உபதலைவராக இருந்த கருனாவைக் காப்பாற்றுவதற்காக தாம் கட்சி ரீதியாக பெற்றிருந்த பதவிகளுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தி அப்புதைகுழியை தோண்டாமல் திட்டமிட்டு தடுத்து கருனாவை காப்பாற்றுவதாக நினைத்து முஸ்லிம் சமூகத்திற்கு புலிகளால் இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொண்டுவரப்படாமல் செய்யப்பட்டது. இதுகூட நமது அரசியல் தோல்வியே நமது இருப்பைப்பற்றி பேசுக்கின்ற வரலாற்றுப்பக்கங்களில் இவைகள் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அமைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அதனை எந்தக்கட்சியினர் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற சமூகமாக யுத்த காலங்களில் பெரும்பாலும் அது முஸ்லிம் சமூகமாகவே இருந்துவந்துள்ளது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இதனை தீர்மானிக்கும் விடயத்தில் பிரதான இரண்டு சிறுபான்மை சமூகங்களும் இருந்துவருகின்றது.
இதனை எப்படி சிறுபான்மை சமூகங்கள் கையாழவேண்டும் என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையிடம் நாட்டை துண்டாடி தனி நாட்டிற்காக போராடிய சமூகம் இன்று சக சிறுபான்மை சமூகத்தோடு பிரதேச செயலக பிரிவிற்காக இனவாதம் பேசுவது ஆச்சரியமாகவுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை: