கூடு விட்டு கூடு பாய்ந்த கெட்ட ஆவி.
பேய் பிடித்திருக்கிறது என்ற போர்வையில் ஒரு குழந்தை பேய் ஓட்டி பெண்ணால் அடித்து கொல்லப்பட்டு இருக்கிறது.
இது நடந்தது ஒன்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூகத்தில் இல்லை. முற் கால பழங்கதைகளிலும் இல்லை. அதுவும் இந்த நவீன உலகத்தில் , எழுத்தறிவு வீதம் கூடிய நாட்டில், ஒரு நகர்புறத்தில் இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
இரண்டாம் வருட சிறுவர் நலத்துறையில் நிபுணத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலம். அப்போது நான் றாகமை போதனா வைத்தியசாலையில் கடமை செய்து கொண்டிருந்தேன். 13 வயது நிரம்பிய ஒரு பெண் பிள்ளை ஒரு வகை அரிய நோயினால் பீடிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட கதை மிகவும் சுவாரசியமானது.
7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கெட்டிக்காரியான சிறீமாலி திடீரென அவளுடைய முகத்தை, வாயை, கோணல் செய்து கொள்கிறாள்; தற்போதைய குமாரிகள் ஃபேஸ்புக் செல்பிகளுக்காக தமது முகத்தை கோணுவது போல. இவள் இப்படி செய்வது அதை பார்க்கின்றவர்களுக்கு; இது அவர்களை பழித்துக் காட்டுவது போல் தோன்றுகிறது.
அதிலும் குறிப்பாக பாடசாலை ஆசிரியர்களுக்கு இது பெரும் சங்கடமாய் மாறி விடுகிறது. மெல்ல மெல்ல அவளுடைய கையெழுத்தும் அலங்கோலமாய் மாறத் தொடங்கியது. கைகளில் ஒரு நடுக்கம், கால்களில் ஒரு வகை ஆட்டம், உடல் முழுவதும் ஒரு வகை பதட்டம். மொத்தத்தில் அவள் முழு உடலும் "பேய் டான்ஸ்" ஆடுவது போல் அடிக்கடி அசையத் தொடங்கியது. நாட்கள் செல்லச் செல்ல இந்த அசைவின் வேகமும் நடனமும் அதிகரித்து வரத் தொடங்கியது. இது அவளை இது கஷ்டப்படுத்தி கொண்டிருந்தது. தன்னால் இதை கொன்றோல் பண்ண முடியவில்லை என்ற ஏக்கம் அடிக்கடி அழுகையாக வெளிப்பட ஆரம்பித்தது.
அக்கம் பக்கம், பாடசாலை முழுவதும் இந்த கதை பரவத் தொடங்குகிறது. சிறீமாலியின் உடலுக்குள் ஆவி புகுந்துவிட்டது என்பது தான் ஊர் முழுக்க ஹாட் டொபிக். கெட்ட ஆவி தான் இவளை இப்படி ஆட்டிப்படைக்கிறது, அந்த ஆவியை இனியும் விடக் கூடாது, விரட்ட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமும். அதற்காக மாந்திரீகம் செய்பவர்கள், பூசாரிகள், பேயோட்டிகள் கொண்டு வரப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவும் பூஜையும்,பலியும்,பரிகாரமும் நடந்தேறுகின்றன. ஆன பயன் எதுவும் இல்லை. மெல்ல மெல்ல கரைந்து போன பொருளாதாரத்தை தவிர.
சிறீமாலியால் வெளியே தலை காட்ட முடியவில்லை. கெட்ட ஆவி புகுந்த அவளால் எப்படி சமூகத்தில் வாழ முடியும்? பாடசாலைக்குச் செல்ல முடியும்.? அப்படியே பாடசாலை வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டோடு அடைந்து கொள்கிறாள்.
நாட்கள் இப்படியே கடந்து போகிறன்றன. தனது மெட்டர்னிடி லீவை முடித்து 4 மாதங்களின் பின் பாடசாலைக்கு வந்த விஞ்ஞான ஆசிரியை சிறீமாலியை தேடுகிறாள். சிறீமாலியின் உடலுக்குள் ஆவி புகுந்த செய்தி மற்ற ஆசிரியர்களால் எத்தி வைக்கப்படுகிறது. அதே நாள் பின்னேரம் சிறீமாலியை தேடி அவள் வீட்டுக்குப் போகிறார் அந்த விஞ்ஞான ஆசிரியை.
சிறீமாலி வீட்டின் ஒரு மூலையில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் கிடந்தாள். அவளைச் சுற்றி பூசைப் பொருட்கள் இருந்தன. கெட்ட ஆவி புகுந்து தனது குடும்பத்தையே சீரழித்து விட்டதாக அவளது தாய் ஓரத்தில் உட்கார்ந்து முனு முனுத்துக் கொண்டிருந்தாள். ஆக மொத்தத்தில் கெட்ட ஆவியினால் தீண்டடப்பட்ட சிறீமாலி தீண்டத்தகாதவளாக மாற்றப்பட்டிருந்தாள். சிறீமாலியை ஆரத்தழுவி கட்டுகளை மெதுவாக அவிழ்த்து விட்டாள் அந்த ஆசிரியை. பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. கைகள், கால்கள், கண்கள், வாய், நாக்கு என உடல் அங்கங்கள் முழுதும் பேய் பிடித்தவள் போலவே ஆடிக்கொண்டிருந்தன.
மிஸிஸ் மாரக்கஸ் ஒரு விஞ்ஞான ஆசிரியை. மிகவும் முன்னேற்றகரமான சிந்தனை உள்ள ஒருவர். மாணவர்கள் கல்வியிலும் வாழ்விலும் அக்கறை கொண்டவர். இந்த பேய், பிசாசு, மந்திரம், தந்திரம், யந்திரம் போன்றவற்றை கடுமையாக எதிர்க்கின்ற ஒருவர். சிறீமாலியின் பெற்றோர்களை அழைத்து விஷயங்களை விளங்கப்படுத்தினார். எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. இறுதியில் சிறீமாலிக்கு என்ன நடந்தாலும் அதற்கு தானே பொறுப்பு என்று அசட்டு தைரியமாக கூறி அவளை சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதி பெற்று கொண்டார். தனது கணவனை அழைத்து ஒரு வாகனத்தை ஹயர் பண்ணி சிறீமாலியையும் ஏற்றிக்கொண்டு வத்தளைக்கு வந்து சேர்ந்தார்.
மாலை நேரம் வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலை கடும் பிஸியாக இருந்தது. அப்போதைய எனது மெடம் அங்கே சனலிங் செய்து கொண்டிருந்தார். சிறீமாலி தனது நம்பர் வந்ததும் உள்ளே அழைப்பட்டாள். எல்லா விபரங்களையும் கேட்டு பரிசோதித்த மெடமுக்கு விஷயம் புரிந்து போனது. உடனே எனக்கு கோல் எடுத்தார். " Ahamed! can you come to Hemas on your way to home. I've an interesting case. Actually it's a rare one என்று சொல்லி முடித்தார். அங்கு போனதும்,சிறீமாலியை கண்டதும் நானே ஒரு கணம் அசந்து போனேன்.
இது பேயோ பிசாசோ இல்லை. இது தான் #Rheumatic_Chorea எனப்படும் ஒரு நோய். #Group_A beta- haemolytic #Streptococcus எனப்படும் ஒரு பக்டீரியாவல் ஏற்படும் #Rheumatic_fever எனும் நோய் நிலைமைக்கு ஒழுங்காக மருந்து செய்யாததால் வரும் நிலைதான் இந்த #Rheumatic_Chorea. இதை உலகுக்கு எடுத்துக் கூறிய டாக்டரின் நினைவாக #Sydenham_Chorea எனவும் சில வேளைகளில் அழைக்கப்படும்.
Chorea என்ற இந்த பெயர் கூட கிரேக்க வார்த்தையில் நடனமாடுதல் என்ற பொருளில் இருந்து தான் வந்திருக்கிறது. இந்த வகை பேய் நடனம் #St_Vitus_dance எனவும் மத்திய கால ஐரோப்பாவில் அழைக்கப்பட்டது.
இது குறித்து மேலதிகமாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே உள்ள சொற்களை கூகுள் பண்ணினாலே போதுமானது.
பேய் பிடித்திருக்கிறது என்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பரிசாரகரிடமும், பேய் ஓட்டிகளிடமும் மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று பொருளாதாரத்தையும் இழந்து நின்ற அந்த பெண் பிள்ளை ஒரு வார கால சிகிச்சையின் பின் சுகதேகியாக வைத்தியசாலையிலிருந்து அழைத்துச் செல்லப்டுகிறாள். இது தான் உண்மை. இது தான் யதார்த்தம்.
அந்த விஞ்ஞான ஆசிரியை இல்லாது போனால் இந்த பிள்ளையும் கெட்ட ஆவியால் தீண்டப்பட்டவளாகவே வாழ்ந்திருப்பாள்.
போலி வைத்தியர்கள் ஹீலர்கள் பேயோட்டிகள் போன்றோரிடம் இருந்து இவ்வாறான சிறுவர் சிறுமியரை காப்பாற்ற நமது அந்த சயின்ஸ் டீச்சர் போன்ற நிறையபேர் நமது சமூகத்திற்கு தேவைப்படுகிறார்கள்.
Dr PM Arshath Ahamed
(MBBS MD PAED)
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று.
பிற்குறிப்பு....
பேயோட்டிகள் ஜின் விரட்டிகள் மாந்திரீகர்கள் என்பவர்கள் எல்லோருமே பித்தலாட்டங்கள் செய்பவர்கள் தாம்.
Arthur C Clarke சொன்னது போல...
Magic is just science that yet we don't understand yet.
ஆனால் விளங்கிய விஞ்ஞானத்தை கூட இன்னும் மெஜிக்காக நம்பும் ஒரு சமூகம் இன்றைய காலத்திலும் வாழ்கின்றது என்பது தான் நாம் கவலைப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.
கூடு விட்டு கூடு பாய்ந்த கெட்ட ஆவி.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 04, 2021
Rating:

கருத்துகள் இல்லை: