Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” (வீட்டுக்கு வீடு தென்னை மரம்) தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பம்

 

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” (வீட்டுக்கு வீடு தென்னை மரம்) தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றலுடன், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ – புஜ்ஜம்பொல, வெலிகெட்டிய தோட்டத்தில் (10.7.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன் தேங்காய்கள் அறுவடை வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

நீண்ட காலமாக இலங்கையின் பெயரை சர்வதேச சந்தையில் உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கு, தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய ஏற்றுமதிப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்காலத்திலும் இந்த நிலைமையைப் பேணுவதற்கு, தென்னஞ் செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை சமூர்த்தி பயனாளிகளுக்கும் இரண்டு மில்லியன் தென்னங் கன்றுகளை நிவாரண அடிப்படையிலும், மேலும் ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை விரும்பியவர்கள் கொள்வனவு செய்து நடுவதற்கும் ஏற்ற வகையில், அடுத்த வருடத்துக்குள் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில், வெலிக்கெட்டிய தோட்டத்தில் ஜனாதிபதி அவர்களினால் தென்னங்கன்று ஒன்று நடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து, தென்னங் கன்றுகளை நாட்டினர். இந்தத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், தென்னங் கன்றுகளை நடுதல் மற்றும் கன்றுகள் விநியோகம் என்பன, அனைத்து அமைச்சுகளினாலும் மேற்கொள்ளப்பட்டன.

சேதனப் பசளையைப் பயன்படுத்தி, தரிசு வயல்களை அண்மித்து “வரிசை” முறைமையில் தென்னை பயிரிடப்பட்டுள்ள ஒரு காணியையும், ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

தென்னை செய்கைக்குப் பயன்படுத்தக் கூடிய சேதன உர உற்பத்தி முறைமை, இயந்திரங்கள், தற்போதுள்ள தென்னங் காணிகளின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் மண் வளப்படுத்தல் நடவடிக்கைகள், நீர் ஊற்றும் முறைமை, இடைப் பயிர்களை நடுதல், முன்மாதிரி விதைத் தென்னை நாற்று மேடைகள், தென்னை செய்கையுடன் சம்பந்தப்பட்ட நோய்கள், கிருமிநாசினிகள், கப்ருக சங்க உறுப்பினர்களின் கண்காட்சிக் கூடங்கள், தரிசு வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்னைப் பயிர்ச் செய்கை என்பவற்றையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, லுனுவில தென்னை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், தென்னை உற்பத்தி மற்றும் தேங்காய்ப் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைக் கட்டிடத்தையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, தென்னை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, 15 பேருக்கு ஜனாதிபதி அவர்களினால் தென்னங் கன்றுகள் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் திரு. ஜூட் பெரேரா, தனது நிறுவனம் 2020ஆம் ஆண்டு ஈட்டிய இலாபத்திலிருந்து 10 மில்லியன் ரூபாயை, திரைசேறிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பிரியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே ஆகியோரும் அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “தொரின் தொரட்ட கப்ருக” (வீட்டுக்கு வீடு தென்னை மரம்) தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 11, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.