Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

குறைந்தது மூன்று காங்கிரசும் இணைந்தாவது 13 க்கான முன்மொழிவுகளை முஸ்லீம்கள் சார்பாக முன்வைக்க வேண்டும்!

எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன் கட்சிகள் 13 திருத்தம் சம்பந்தமான தங்களது முன்மொழிவுகள் ஆலோசனைகளை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் SLMC, ACMC, NC என்ற மூன்று முஸ்லிம் கட்சிகளும் இணைந்து ஒரு பலமான முன்மொழிவை முஸ்லிம்கள் சார்பாக சமர்ப்பிப்பது சாலச் சிறந்தது. 

அது மட்டுமன்றி எதிர்கால தேர்தல்களில் கூட ஒற்றுமைப்பட வேண்டிய நிலையை இன்று இலங்கை முஸ்லிம்கள் உணர்கின்றனர்.

இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வடகிழக்கில் வாழும் முஸ்லிம்கள் விசேடமான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, 
இன்றைய நிலையில் பேசு பொருளாக மாறியுள்ள 13வது திருத்தத்தின் மீதான அதிகார பரவலாக்கம், காணி, பொலீஸ் அதிகாரம் மற்றும் ஏனைய விடயங்கள் சம்மந்தமாக மட்டுமல்ல, தமிழ் தரப்பின் வட கிழக்கு இணைப்பு சம்பந்தமான கோரிக்கை அங்கு வாழும் முஸ்லிம்களின் நிலை போன்ற விடயங்கள் கவலைக்கிடமானதாக உள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அண்மைக்காலத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது மட்டுமன்றி இந்திய ,இலங்கை தூதான்மை சந்திப்புக்கள் பல மேற்கொள்ளப்பட்டன
இறுதியில் ஜனாதிபதியின் அண்மைய இந்தியாவுக்கான விஜயம் போன்றன இடம்பெற்றிருந்தன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒன்றித்து வாழும் சிறு பான்மை இனங்களில் ஒன்றான முஸ்லீம்கள் கைவிடப்பட்டனரா அல்லது என்ன நடந்தது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெற்றதாக தெரியவுமில்லை வெளிவரவுமில்லை.

இதற்கு முற்று முழுதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் கட்சிகள் பொறுப்புக் கூறவேண்டும்.

முதலில் குறைந்தது முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமாவது கதைத்து தங்களது வலுவான ஒற்றுமையை அரசுக்கு காட்டுவததற்குக் கூட முனையவில்லை என்பது கவலையளிக்கிறது.

கடந்த நான்கு தசாப்த கால வரலாற்றில், 1980களில் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய SLMC கட்சி 2000ஆம் ஆண்டுவரை தங்களது ஒட்டு மொத்த சக்தியை பிரயோகித்த விடயம் இன்று வரலாராகிவிட்டது.

இன்றைய நிலையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் துரதிஷ்டவசமாக பல காங்கிரஸ்களாக  பிரிந்து தனித் தனியே செயற்பட்டு வருகின்றது.
அதிலும் சமூக நலனை விட தங்களது கட்சி நலனுக்கு அதிக முக்கியம் வழங்கி செயற்படுகிறது என்பதும் மிகவும் கவலையான விடயம்.

1980க்கு பின்னரான  காலங்களில் தேசிய கட்சிகளில் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகளின் பலவீனம், மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் என்பன முஸ்லிம்களின் பலமான  தலைத்துவத் தேவையை வேண்டி நின்றது.

இந்நிலையில்தான் 1980களின் பின்னர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட SLMC    வடகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது மாகாண  சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றி பிரதான எதிர்கட்சியாக அமர்ந்தது முதல் முஸ்லிம்களின் மிகவும் பலமான பேரம் பேசும் சக்தி உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அன்று ஆர். பிரேமதாஸ ஜனாதிபதி அவர்களுடன் பேரம் பேசி விகிதாசார தேர்தல் முறையில் வெட்டுப் புள்ளியை 5%மாக குறைத்தது மட்டுமல்லாது இன்னும் பல விடயங்களையும் பெற முடிந்தது.

ஜனாதிபதிதேர்தலில் பிரேமதாஸ அவர்களுக்கு ஆதரவு வழங்கினாலும், 1989ஆண்டு பொதுத் தேர்தலில் தனது ஆசனத்துடன் எதிர் கட்சியில் அமர்ந்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த மர்ஹும் அஷ்ரப் அவர்கள்,

1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வட கிழக்கு உட்பட முஸ்லிம் பிரதேசங்களின் கூடுதல் வாக்குகளை பெற்ற நிலையில் UNP  காமினி திஸாநாயக்க  தலைமையிலும், SLFP சந்திரிகா அம்மையாரின் தலைமையிலும் அவரது ஆதரவை பெற எத்தனித்தனர்.
அந்த நிலையில் சந்திரிகா  அம்மையாருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதனை ஊகித்து, SLFPயை ஆதரித்து ஆட்சி அமைக்கச்செய்தார்.
அத்துடன் தான் விரும்பிய பலமான அமைச்சு ஒன்றையும் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் 1977ஆம் ஆண்டு ஜே. ஆர் தலைமையில் 4/5 பெரும் பான்மையுடன் ஆட்சிக்கு வந்த UNP ஆட்சிக்கு முறறுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்
சந்திரிகா அம்மையாரை வெற்றி பெறச் செய்து  மீண்டும் ஒரு பலமான அமைச்சுப் பதவியை மட்டுமல்ல ஆட்சியில் பலமிக்க பங்காளராகவும் காணப்பட்டார். 

எல்லா சமூகங்களும் சமமாக வாழ்வதற்கான  புதிய யாப்பு சீர் திருத்தத்தை மேற்கொண்டு, யாப்பு குழுவில் தாமும் இணைந்து செயற்பட்டு  புதிய யாப்பு முன்மொழிவை மர்ஹும் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் அளவுக்கு சக்தி கொண்டவராக காணப்பட்டார்

எனவே இவ்வாறு காணப்பட்ட முஸ்லீம் மக்களின் பேரம் பேசும் சக்தி இன்று உடைந்து சுக்கு நூறான நிலையில் அரசினால் கணக்கில் எடுக்க முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்துள்ளது.

இத்தகைய நிலையை மாற்றுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து பேசி ஒரு அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதன் மூலமாக எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து எமது உரிமைகள் சம்பந்தமாக பேச முடியும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

எதிர்வரும் 15ஆம் திகதிகளில் சமர்ப்பிக்க உள்ள முன்மொழிவுகளை குறைந்தது மூன்று கட்சிகளுமாவது இணைந்து சமர்பிக்க வேண்டும்.

அத்துடன் இன்று புத்திஜீவிகள் ஒதுங்கிய நிலையில் அரசியல்வாதிகள் பார்கட்டும் என்று விட்டுவிடுவது கூட சமூகத்திற்கு ஆரோக்கியமான விடயமல்ல. இன்று பல ஆளுமைகள் குறிப்பாக துறைசார் வல்லுனர்கள் ஓய்வு பெற்று வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வெளிநாட்டு சேவை, நிருவாக சேவவை மட்டுமன்றி துறை சார்ந்த வல்லுனர்கள், பேராசிரியர்கள் அடங்கலான  ஒரு குழுவை ஏற்டுத்தி இலங்கை, குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் சம்பந்தமாக சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து.

A.L.M சலீம்
குறைந்தது மூன்று காங்கிரசும் இணைந்தாவது 13 க்கான முன்மொழிவுகளை முஸ்லீம்கள் சார்பாக முன்வைக்க வேண்டும்! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 05, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.