கிழக்கு முஸ்லிம்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எப்போதைக்குமாக வலியுறுத்துவோம் கலாநிதி றவூப் ஸெய்ன்
இன்று 13 ஆம் திருத்த அமுலாக்கம் பற்றிய பேச்சுக்கள் அடிபடும் தருணம் முஸ்லிம்களும் 13 அமுல்படுத்தப்பட்டால் அல்லது அமுல்படுத்தப்படும் போது முஸ்லிம்களின் பிரச்சினைகளும் இணைத்துப் பேசப்பட வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. இப்படிக் கூடிப் பேசுவதும் முஸ்லிம் தரப்பு அறிக்கைகள் சமர்ப்பிக்க கலந்துரையாடல்களை நடாத்துவதும் ஒரு மரபாகி விட்டது. கிட்டத்தட்ட இது ஒரு சடங்கு சம்பிரதாயம் போலவே மாறிவிட்டது. இது ஒருவகை எதிர்வினை ஆற்றும் அரசியல் Reactive Politics என்பதுதான் எனது அவதானம். காரணம் இதுபோன்ற பல கலந்துரையாடல்களில் நான் கடந்த காலங்களில் கலந்து கொண்டுள்ளேன். இதனால் நேரமும் காலமும் பணமும் விரயமானதைத் தவிர வேறொன்றும் எஞ்சவில்லை.
நாம் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பதையும் தமிழர் தரப்புக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு பற்றிய முஸ்லிம் நிலைப்பாடு என்ன என்பதையும் தெட்டத் தெளிவாகவும் உறுதியாகவும் தீர்மானித்துக் கொண்டால் அதுவே எப்போதைக்குமான எமது நிலைப்பாடாக இருக்கும். அதற்கான ஜனநாயக வழிப்போராட்டத்தை முன்னெடுப்பதே நமது கரிசனையாக இருக்கும். தமிழர்களுக்கு அது என்றால் எங்களுக்கு இது என்பதான If than politics ஒரு சந்தர்ப்பவாத அல்லது எதிர்வினை அரசியலாகும்.
நிலையான, எதிர்கால நோக்குள்ள ஓர் அரசியல் நிலைப்பாடில்லாத ஒரு வகை வங்குரோத்து நிலைதான் இது என்பது எனது கணிப்பீடு.
உண்மையில் கிழக்கு வடக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்ட ஒரு மாகாணம். இன்று அங்கு பெரும்பான்மை முஸ்லிம்கள். வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது ஒரு வரலாற்றுப் புனைவு. கள அரசியல் யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒருவகை அரசியல் அடாத்து. எல்லா மாகாணங்களும் தனித்தனியாக இருக்க வடக்கு கிழக்கு மட்டும் ஏன் இணைய வேண்டும்? இணைத்தால் தமிழர் பெரும்மாபான்மையாகவும் முஸ்லிம்கள் 18% சிறுபான்மையாகவும் மாற்றப்படுவார்கள்.
சிங்களப் பெரும்பான்மையிடமிருந்து தமிழர் இன்று எதிர்பார்ப்பது போல் கிழக்கு முஸ்லிம்கள் எதற்கும் தமிழர்களிடம் வாய்பிளந்து எதிர்பார்த்து ஏமாறும் நிலையைத்தான் இது உருவாக்கும்.அதில் நமக்கு என்ன சந்தேகம்.?
ஆகவே எங்கள் தெளிவான நிலைப்பாடு கிழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தொடர்ந்தும் தனித்திருப்பதுதான். அது ஒரு போதும் வடக்குடன் இணைக்கப்படக்கூடாது.
இரண்டாவது விடயம், 13 ஆம் திருத்தம் வழங்கும் பொலிஸ் அதிகாரமோ காணி அதிகாரமோ இணைந்த வடக்கு கிழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஏலவே முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழ் தரப்பால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் தமிழ்தரப்பால் விடுவிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் 28% முஸ்லிம்கள் 2% நிலத்துடன் வாழ்கின்றனர். அம்பாறையில் 45% பெரும்பான்மை முஸ்லிம்கள் 14% நிலத்துடன் உள்ளனர். இத்தனைக்கும் காணி அதிகாரம் மாகாணசபைக்கு வழங்கப்படாத நிலையில்தான் இந்தக் கையறு நிலை என்றால் காணி அதிகாரமும் பொலிஸ் அதிகாரமும் இணைக்கப்பட்ட, தமிழர் ஆதிக்க மாகாணம் ஒன்றுக்கு வழங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு தெருவோரச்சிறுவனுக்கும் சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.
கிழக்கு தனியாக இருக்கும் நிலையில் அதன் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் மக்களுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பொலிஸ் அதிகாரம் அனாவசியமான ஒன்று. அது தேவையற்ற பிரச்சினைகளையே கொண்டுவரும்.
மூன்றாவது விடயம் அம்பாறையிலும் திருகோணமலையிலும் இன்று பெரும்பான்மையாக வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.
யாழ்ப்பாணம். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுணியா, மன்னார்,மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும் பான்மையாக உள்ளனர் என்ற ஒரே காரணத்துக்காக இந்த மாவட்டங்கள் அனைத்திலும் இன்று தமிழர்களே அரசாங்க அதிபர்களாக அல்லது மாவட்ட செயலாளர்களாக வீற்றிருக்கின்றனர். ஏனைய 17 மாவட்டங்களில் மட்டுமே சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் ஆனால் 19 மாவட்டங்களில் அவர்கள்தான் அரசாங்க அதிபர்களாக அல்லது மாவட்ட செயலாளர்களாக (District Secretaries) நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏன் ஆகக்குறைந்தது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமாவது முஸ்லிம் மாவட்ட செயலாளர்கள் வரலாற்றில் ஒருபோதும் நியமனம் பெறவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? மாவட்ட செயலாளரே ஒரு மாவட்டத்தின் அரசாங்க நிருவாகப்பிரதிநிதி என்ற வகையில் அவருக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் உள்ளன. அது முஸ்லிம்களுக்கு சாதகமாகப்பயன்பட வேண்டுமாயின் அவர் ஒரு முஸ்லிம் அதிகாரியாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது இன்று கிழக்கு முஸ்லிம்களுக்கு நன்றாகப்புரிகிறதல்லவா?
நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம். தென்கிழக்கு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம், கல்முனை கரையோர மாவட்டம் என்றெல்லாம் கழுதையைத் தேய்த்து தேய்த்து கட்டெறும்பாக்கி, முஸ்லிம்களின் குருதியைச் சூடாக்கி சூடாக்கி அரசியல் செய்துவரும் தனிக்கட்சியாகட்டும்.
உணர்ச்சி அரசியல் செய்யும் கிழக்கின் தனிநபர் கட்சிகளாகட்டும் இவர்களுக்கு உண்மையான சமூகக் கரிசனை இருந்தால், அவர்களுக்கு உண்மையான அரசியல் பேரம்பேசும் ஆற்றல் இருந்தால் இடுப்பில் இயலுமை இருந்தால் குறைந்தது இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் அனுபவமுள்ள முஸ்லிம் அதிகாரிகளை அரசாங்க செயலாளர்களாக நியமிக்க ஆவன செய்யப்பட்டும். அவர்கள் ஒருபோதும் செய்யப்போவதில்லை.
இங்கே நான் முன்வைத்த மூன்று விவகாரங்களும் தான் எங்கள் தெளிவான அரசியல் நிலைப்பாடுகள். அதை அரசாங்கத்திடம் முன்வைத்து அவற்றை அடையப்பெறுவதை உறுதி செய்வதே நமது ஜனநாயக மார்க்கம். வேறு எதைப் பேசியும் பத்து சதத்திற்கும் புண்ணியமில்லை. கூடிக்கூடிக்கலைவதும் அறிக்கைகள் விடுவதும்தான் நமது அரசியல் கூத்தாக இருக்குமெனில் நாம் தோற்றுப்போவதை யாராலும் நிறுத்த முடியாது.
எங்கள் நிலம் எங்களுக்கு உங்கள் நிலம் உங்களுக்கு. கிழக்கின் அத்தனை உரிமைகள் சலுகைகளும் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிரப்பட வேண்டும். இதுவே நீதியானது நேர்மையானது.
கலாநிதி றவூப் ஸெய்ன்
2023.09.03
கிழக்கு முஸ்லிம்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எப்போதைக்குமாக வலியுறுத்துவோம் கலாநிதி றவூப் ஸெய்ன்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 07, 2023
Rating:

கருத்துகள் இல்லை: