நாடளாவிய ரீதியாக பரந்து காணப்படும் சர்வமத வணக்கஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்..
இக்கருத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் விகாரைகள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துக் கோயில்கள் போன்ற அனைத்து வணக்கஸ்தலங்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலாவது கட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டாகும் போது 5000 வணக்கஸ்தலங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த வணக்கஸ்தலங்களின் கூரையின் மீது ஐந்து கிலோவாற்று (5kW) இயலளவு கொண்ட சூரிய மின்கலத்தொகுதியொன்று பொருத்தப்படும். அத்துடன், இதன்மூலம் வணக்கஸ்தலங்களின் மின்பட்டியலைக் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வணக்கஸ்தலத்தின் மின் பயன்பாட்டுக்குப் பின்னர் எஞ்சுகின்ற மின் அலகுகள் தேசிய மின்வலுக் கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்.
முதல் கட்டத்தின் கீழ் நிறுவப்படவுள்ள 5000 சூரிய மின்கலத் தொகுதியில் மாதாந்தம் ஒரு மின்கலத்தொகுதி மூலம் 500 - 600 மின் அலகுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் நிறுவப்படுகின்ற ஒட்டுமொத்த மின் இயலளவு இருபத்தைந்து மெகாவாற்று (25MW) ஆகும். இங்கு 37 மில்லியன் மின் அலகுகள் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
குறித்த மின் அலகுகள் சுவட்டு எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுமாயின் வருடாந்தம் ஏறத்தாழ 2,650 மில்லியன் ரூபாய்கள் செலவாகும். அதற்கமைய, இப் பசுமை வலுசக்திக் கருத்திட்டம் (Green Energy Project) மூலம் ஆண்டுதோறும் எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவில் குறிப்பிடத்தக்களவை குறைத்துக் கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை: