Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நீதி மன்றங்களில் ஜனாசா எரிப்பை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகளும் மற்றோரும் பெரும்பான்மை மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றன



நீதி மன்றங்களில் ஜனாசா எரிப்பை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகளும் மற்றோரும்  பெரும்பான்மை மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றன. அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர் மக்கள் நீதிமன்றுக்கு செல்வதே பொருத்தமானது.

முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கவேண்டும் என்பது இஸ்லாமிய மத நம்பிக்கையாகும். நான் சட்டம் தெரிந்தவனல்ல, ஆயினும் எந்த மதமானாலும் அதன் நம்பிக்கை தொடர்பான ஒரு தீர்ப்பை அடிப்படை மனித உரிமை மீறல் என்று தொடரப்படும் வழக்கில் சாதகமாகப் பெறுவது கடினமாக இருக்கலாம். அதுவும் மிக அதிகமான மக்கள் திகிலடைந்திருக்கும் ஒருஇக்கட்டான சூழ்நிலையில், பெரும்பான்மை மக்கள் கூர்ந்து அவதானித்துவரும் ஒரு விடயத்தில் அம்மக்களின் விருப்புக்கு மாறான தீர்ப்பு ஒன்று எடுப்பது இலகுவாக இருக்குமோ தெரியாது. ஆனால்; இவ்வழக்குகளை தொடுத்தவர்களுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட அளவு செல்வாக்கு ஏற்படும்.சூழ்நிலையைப் பொறுத்து இச்செல்வாக்கு சறுக்கவும் கூடும். வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்கனவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிற கோபம்  கோபாவேசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.சுமந்திரன் முன்நிலையாகி வாதாடுகிற வழக்கு என்றால் இந்தக் கோபம் இரட்டிப்பாகவும் ஆகும். சுமந்திரன் முஸ்லிம்களுக்குள் தற்காலிகமாக கதாநாயகனாகிவிட்டார். 

இன்னும் உயிரோடிருக்கும் பல இலட்சம் முஸ்லிம்கள் சிங்களவர் மத்தியில் வில்லன்களாகிவிட்டார்கள். மட்டுமல்ல நீதிமன்று இலங்கை சுகாதாரத்தரப்பிடம் அபிப்பிராயம் கேட்டு எரிப்பது அவசியம் என்று தீர்ப்பை தந்தால் எரிப்பது நிரந்தரத் தன்மையை அடைந்துவிடுமல்லவா? இப்படி ஆயின் அடுத்தது என்ன?? தெற்கில் ஒவ்வொரு முஸ்லிம் வீட்டின் உள்ளேயும் "சீன வெடி" கொழுத்தி எறியப்பட்டு வெற்றிக்கொண்டாட்டம் நடந்தால் அதனைத் தடுப்பது யார்? அரசாங்கமா இராணுவமா வழக்குகளை தாக்கல் செய்தவர்களா இல்லை வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகளா?

இவ்விடயத்துக்கு நியாயமாக குரல் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் இதனை நிதானமாகத்தான் கையாண்டு வந்தது. றிஷாத் பதியுதீன் வழக்கு தொடுக்கும் வரைதான் இந்த நிதானம் நின்றுபிடித்தது. தற்போது றவூப் ஹக்கீம் அலியை வைத்து வழக்கை வைத்துவிட்டார். இதனை அரசியல் நகர்வு என்று அழைக்காமல் முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்த நகர்வு என்று எப்படி சொல்வது?  கண்டியில் கிடைக்க இருக்கும் சொற்ப அளவான சிங்கள வாக்குகளும் அற்றுப் போகும் என்று தலைவர் ஹக்கீம் வழக்குத் தொடுனராக இருக்க பயந்துவிட்டார். அம்பாறையைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எவரையுமோ, திருமலையின் முன்னாள் எம் பி தௌபீக்கையோ வழக்குத் தொடுனராக இருக்க அநுமதிக்கவில்லை. ஏனென்றால் அந்த மாவட்டங்களில் கணிசமான சிங்கள வாக்குகள் இருக்கின்றன. இம்மாவட்டங்களைச் சேர்ந்த மு.கா உறுப்பினர்கள் வழக்கு தொடுனராக இருந்தால் சஜித் அணியின் தொலைபேசி சின்னத்துக்கு பாரிய சிங்கள வாக்குச் சரிவு ஏற்படும். இது இவ்விரு மாவட்டங்களிலும் எதிர்வரும் தேர்தலில் தெரிவாகும் முஸ்லிம் காங்கிரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை உண்டாக்கும். மட்டக்களப்பில் சிங்கள வாக்குகள் மிகக்குறைவு இந்த சொற்ப வாக்குகள் காங்கிரசுக்கு கிடைப்பனவல்ல. இதனால் அலி வழக்காளியாக்கப்பட்டார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குள் அலியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்து நஸீர் ஹாபிஸின் தோல்விக்கு அல்லது கல்குடா வேட்பாளரின் தோல்விக்கு வித்திட்டு மூன்று தேங்கா மாங்காய்களைப் பறிக்கலாம்.இவையெல்லாம் சுய இலாப அரசியல் அன்றி பொது நல போக்கு என்று எதனை வைத்து நம்புவது? எப்படியோ அலியும் பலிதான் என்பதை காலம் நிரூபிக்கும். 2001 ஆம் ஆண்டும் காலம் அவருக்கு ஒரு நிரூபணத்தைச் செய்தது. 

இவற்றை எல்லலாம் வெல்வதற்கு பெரும்பான்மை மக்கள் நீதிமன்றுக்கு முன்னால் செல்வதுதான் இப்போதைக்கு இருக்கும் இலகுவான சிறந்த வழியாகும்.முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்யப்படும் பொய்யுரைகளை மெய்யுரைகளால் வெல்லலாம் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கவேண்டும்.

நான் எனது ஊரில் கிடைத்த வரலாற்றின் அடிப்படையிலும் மற்றும் எனது கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளை வைத்தும் சிங்கள மக்களின் நீதி மன்றுக்கு செல்கிறேன். இவ்வாறு நாட்டின் நாலாபக்கங்களிலும் வாழ்ந்து மறைந்த முஸ்லிம் பெரியார்கள் நாட்டுக்கும் இலங்கை மக்களுக்கும் விசேடமாக சிங்கள மக்களுக்கும் செய்த நன்மைகள் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றனவே அவற்றை தூக்கிக்கொண்டு வழமையான வீறாப்பு மொழியைத் தவிர்த்து சண்டித்தன மற்றும் பெருமித சொற்களை தவிர்த்து நீதிமன்ற மொழியைக் கையிலெடுத்து பெரும்பான்மை மக்களின் மன்றுக்கு செல்லலாமே.

இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல வெளிநாட்டு முஸ்லிம்களும் இலங்கைக்கு வந்து நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டு படைகளுக்கு எதிராகப் போராடி தமது இன்னுயிரை ஈந்துள்ளார்கள் என்று எடுத்து சொல்லலாம். துருக்கியை பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். கேரளாவிற்கு இலங்கையில் இருந்து முஸ்லிம் பயங்கரவாதிகள் சென்று வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.சிங்கள புதிய பரம்பரையும், நடுத்தர வர்க்கமும்,நடுவு நிலையான மேன்மக்களும்கூட புதிய புனைகதைகளைத்தான் கேட்டு மனதில் பதிந்து வைத்துள்ளனர். 

துருக்கியில் இருந்து படையினர் இங்கு வந்து இலங்கையருடன் சேர்ந்து வெளிநாட்டு படைகளுக்கு எதிராக போராடிய வரலாற்றை, கேரளாவில் இருந்து குஞ்ஞாலி மரைக்காரின் தீரம் மிக்க நன்கு பயிற்றப்பட்ட கடற்படை வந்து போராடி இலங்கையை காப்பாற்றிய வரலாற்றை எல்லாம் தூசி தட்டி எடுத்து சமநிலையான ஊடகங்களின் ஊடாக சிங்கள மக்களின் நீதி மன்றத்தில் வைக்கவேண்டியது முஸ்லிம் மக்களின் வாக்குகளை அள்ளி எடுக்கின்ற நன்கு சரளமாக சிங்களம் பேசக்கூடிய கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னணி உறுப்பினர்களின் கடமையல்லவா?சில சிங்கள ஊடகங்களில் நாளொன்றுக்கு ஒரு சில மணி நேரத்தை கட்டணம் செலுத்திப் பெற்றும் மக்களோடு பேசலாம். 

இந்தியாவை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முகலாயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்யவோ மதமாற்றங்களை முன்னெடுக்கவோ  முயலவில்லை,மேலும் முஸ்லிம்கள் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கும், விருத்திக்கும் துணை நின்றவர்கள்  என்ற வரலாற்றையும் மீள இலாவகமான மொழி நடையில் நினைவூட்டலாம்.#)

எனது திறந்த மடல்................

பெரும்பான்மை மக்கள் நீதி மன்றத்தில் முஸ்லிம்கள் சார்பாக கீழ்காணும் வழக்கை தாக்கல் செய்கிறேன்.

கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியக் கடமையை மீறி அவை எரிக்கப்படுவது முஸ்லிம்களின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தி ஆறாத வடுவாக உருவாகி வருகிறது.

இவ்விடயம் பல அரசியல் கட்சிகளால் அவைகளது அரசியல் இலாபத்துக்காக பாவிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. தத்தமது மதம் சார்ந்த மக்களின் ஆதரவை அணிதிரட்டுவதற்கான வழியாகவும் கூட இவ்விவகாரம் பிரச்சாரப்படுத்தப்படுகிறது.

மேலும்; ஏற்கனவே நமது நாட்டில் புரையோடிப்போய் இருக்கிற பயங்கரவாத அச்சத்துக்கு மேலதிகமாக தற்போது கொவிட்- 19 அச்சம் மக்களிடம் குடிகொண்டிருக்கிறது. சில கட்சிகள் இவ்வச்சங்களை தேர்தல் அரசியலில் வெற்றிக்கான அச்சாணியாக  பொருத்தும் முயற்சியில் இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் கண்டுபிடிக்க முடியும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், செல்வத்தை சேர்த்துக்கொள்வதற்கும் மதங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சி ஆசிய வட்டகையில் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது.

கொரோனாவினால் இறந்தவர்களை எரிக்கலாம் அல்லது உரிய பாதுகாப்பு கவசமிட்டு புதைக்கலாம் என்று உலக சுகாதார இஸ்தாபனம் கூறியுள்ளது. இறந்த உடல் புதைக்கப்பட்ட பின்பும் அவ்வுடலில் இருந்து நோய் மற்றவர்களுக்கு தொற்றும் என்று வைத்தியர்களோ நுண்கிருமி தொடர்பான விஞ்ஞானிகளோ ஆதாரபூர்வமாக இன்னும் சொல்லவில்லை.மற்றும் உலகில் அபாரமான முறையில் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த நாடுகளில் கொவிட்-19 வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் அநேக உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதையும் செய்திளில் பார்க்கிறோம்.இவ்வடக்கங்களால் நோய் தொற்று ஏற்றட்டது என்று எங்கும் இதுவரை பதிவாகவில்லை. 

இவ்விடயம் தொடர்பாக  சுகாதார அமைச்சினால் வெறும் சுற்றறிக்கைகளே வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகளில் முதலாவதில் அடக்கம் செய்வதற்கும் அனுமதி இருந்தது. இரண்டாவதில்தான் எரிப்பது என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களோடு புதைப்பது ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் மரணித்தவரின் மதம் சார்ந்த அடிப்படையில் இறுதிக் கிரியைகளை செய்வதை கவனத்தில் எடுக்காமல் உயிர் வாழும் மக்களின் ஆபத்தற்ற வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படலாம். இஸ்லாத்திலும் சூழலுக்கு ஏற்ப தகுந்த உடனடி தீர்மானம் மேற்கொள்வதற்கு அனுமதி உண்டு. பன்றி இறைச்சியை ஹறாம் ஆக்கியுள்ள இஸ்லாம் உணவு கிடைக்காத இடத்தில் உயிரைக் காப்பதற்காக "செத்த பன்றி" இறைச்சியை உண்ணுவதற்கு அனுமதியை வழங்கியுள்ளது.உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட மிருகங்களையே தக்பீர் செய்து ஹலாலாகத்தான் சாப்பிடலாம் என்ற விதியை வைத்துள்ள மார்க்கம் உயிர் பாதுக்காப்புக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை செத்த பன்றி இறைச்சி விடயத்தில் காணலாம். உலகாயத அக்கறைகளுக்கான ஆன்மீகப் பரிகாரமுறைகள் எல்லா மதங்களிலும் நிறையவே இருக்கின்றன.

உலக அளவில் முஸ்லிம்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்தவர்கள். பல பாரிய யுத்தங்களினாலும் உட்பிரிவினை சண்டைகளாலும் மில்லியன் கணக்கில் உயிரிழப்பை சந்தித்தவர்கள் கொத்துக்கொத்தாக மரணம் நிகழும் போதெல்லாம் அவர்களது உடலங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்று அக்காலத்தில் எவரும் கேள்வி எழுப்பவில்லை.கெங்கிஸ்தானின் மொங்கோலிய யுத்தம், சிலுவை யுத்தம் போன்றன நடைபெற்ற காலங்களில் மரணமடைந்த முஸ்லிம்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது என்று அன்றைய முஸ்லிம்கள் கேள்வி எழுப்பி இருக்கவில்லை. எனவே, கொரோனாவால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய முடியாது, எரித்தே ஆகவேண்டும் என்பதற்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான நியாயங்களைக் காட்டுமாறு இலங்கை முஸ்லிம்கள் தயவுடன் கேட்டு நிற்பது நியாயமானதே. அடக்கம் செய்வதால் ஆபத்து என்ற செய்தியை மக்களுக்குள் வேண்டுமென்றே பரவவிட்டு செய்யப்படும் அரசியல் பிரச்சாரத்தால் மக்கள் அடைந்திருக்கிற பயத்தை நீக்கும் பொறுப்பு அரசையும் துறைசார்ந்த வல்லுனர்களையும் சார்ந்ததாகும்.

அரசியல் வேட்கைகளை அடைந்துகொள்வதற்காக சந்தர்ப்பங்களை பாவித்துக்கொள்ளுகிற,ஊடகங்களில் வாய்ச்சவடால் விடுகிற முஸ்லிம் நபர்கள் மிகச் சொற்பமானவர்களே நம் நாட்டில் உள்ளனர்.சாதாரணமான எளிய முஸ்லிம் மக்களில் மிகப்பெரும்பான்மையினர் தங்களை இலங்கைக் குடிமக்கள் என்று அடையாளப்படுத்துவதில் பெருமைகொள்கிறார்கள். ஆனால் இவர்கள் அடையாள அரசியல் மற்றும் அடையாள ஆன்மீகம் என்ற பொய்மைகளால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறேன். இந்த ஏமாற்று நாடகப் பட்டறையையும், போதனைக் கடைகளையும் கவனத்தில் எடுத்து அப்பாவி முஸ்லிம் மக்களோடு குரோத உணர்வை வளர்க்கவேண்டாம் என்று முஸ்லிம் அல்லாத அனைத்து பெரும்பான்மை மக்களிடமும் வினயமான வேண்டுகோள் விடுக்கின்ற அதேவேளை; அனைத்து இனங்களிலும்,மதங்களிலும் இவ்வாறான நபர்களும் நிறுவனங்களும் இக்காலத்தில் உள்ளனர் என்பதையும் கூற விரும்புகிறேன்.

இலங்கையில்  உள்ள அனைத்து மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள், புதிய நவ பொருளாதார முறைமைகளின் தாக்கத்தினால் தமது மதங்களின் பெருமரபு என்று நம்புகிற பகுதியின் உள்ளடக்கங்களை 1980 களில் இருந்து மறுசடங்காக்கம் மற்றும் மறுவசீகரமாக்கம் செய்யத் தொடங்கினர். இதன் விளைவுகளில் ஒன்றாக நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பரஸ்பர சந்தேகமும், அச்சமும் தோன்றியிருக்கிறது.

மேலும்; அரசியல் "தரிசனக் கலாச்சாரம்" ஒன்றும் செயற்கையாக எழுச்சிபெற்று வந்துவிட்டது. அரசியல் கட்சிகள் சார்ந்த ஆன்மீகக் காட்சிகள் அரசியல் செய்வதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமான புதிய உத்தி ஒன்றின் வடிவமாக வளர்ந்துவிட்டது. எல்லா வண்ணக் கட்சிகளும் ஆன்மீகத்தை மக்களிடையே காட்சிப்படுத்தி அரசியல் செய்வது சிறந்த பயனுடையதாக அமைகிறது என்பதை அனுபவத்தில் கண்டுள்ளன.ஆகவே; கட்சிகளின்  தலைவர்கள் பலரும் உறுப்பினர்களில் அநேகரும் இவ்விடயத்தில் தமது சூழ்ச்சி மேதமையை காட்டப் புறப்பட்டுவிட்டார்கள்.
கொரோனாவின் ஆபத்தில் இருந்து இலங்கை மீட்சி பெற்ற பின்னர்  நமது நாட்டை முன்நோக்கி நகர்த்த விரும்பினால் நமது முன்னோர்கள் இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து கடைப்பிடித்த நாம் இலங்கையர் என்ற ஐக்கியத்தைக் குறிவைத்து இன்றைய பரம்பரை  பின்நோக்கித் திரும்பவேண்டும்.

எந்த நீதிமன்றங்களையும் விட மக்கள் நீதிமன்றமே உன்னதமானது. பெரும்பான்மை சிங்கள மக்கள் நீதிமன்றத்துக்கு முஸ்லிம்களின் உடலங்களை எரிப்பது தொடர்பான வழக்கை கொண்டு செல்வதற்காகவே இம்மடலை வரைந்துள்ளேன். சமநிலையான ஊடகங்களை இவ்வழக்குகளுக்காக கட்டணம் வசூலிக்காது முன்நிலையாகும் வழக்குரைஞர்களாக நம்பி எனது மடலை இவ்வூடகங்களுக்கு அனுப்புகிறேன். அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் போன்றோரிடம் கோரிக்கைகளை விடுப்பதைவிடவும் மக்கள் நீதிமையத்திடம்  கேட்பது பயன் தரக்கூடும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன். உடல்கள் எரிக்கப்படுவதால் கவலை கொள்வோர் அனைவரும் மத பேதமின்றி சிங்கள பௌத்த மக்கள் மன்றத்திடம் வழக்குரைக்குமாறு ஆலோசனை கூறுகிறேன்.

1925 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னரே தலதா மாளிகைக்கு  இலவசமாக ராஜா யானையை பரிசளித்த ஏறாவூரின் மகனாகவும் யானையை வழங்கிய உமர்லெப்பை பணிக்கரின் உறவினர்களில் ஒருவனாகவும்  பெருமதிப்புள்ள சிங்கள மக்களிடம் முஸ்லிம் உடலங்களை எரிப்பதை இனிமேலாவது நிறுத்தி ஆபத்தில்லாத அடக்கத்திற்கு வழி சமைக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். இதனைச் செய்வதற்கு தீர்மானிக்கும் சக்தியாக உள்ள அரசியல் மற்றும் சுகாதாரத் துறை பிரமுகர்களுக்கு நீங்கள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியும். 

இலங்கை முஸ்லிம் ஒருவரால் வழங்கப்பட்ட இந்த யானை கண்டி எசல பெரெஹராவில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் சேவையாற்றியுள்ளது.இந்த யானையின் சர்வதேப் புகழ் இலங்கைக்கு பல இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த வாய் பேசா பிராணி தலதா மாளிகையில் சேவையாற்றிய அவ்வளவு காலத்திலும் பல பில்லியன் டொலர் அந்நியச் செலவாணியை எமது தாய் நாட்டுக்கு உழைத்து தந்துள்ளது.தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ராஜாவும் உமர்லெப்பை பணிக்கரும் நமது நாட்டின் ஆயிரம் ரூபாய் பண தாளை அலங்கரித்துள்ளனர். இந்த பண தாளை தொடாதவர் யாரும் நமது நாட்டில் இருக்கமாட்டார்கள். ஆகவே; இந்த எரியும் பிரச்சினையை அணைத்து தருமாறு சகோதர பௌத்த மக்களிடம் ராஜா மற்றும் உமர்லெவ்வை சார்பாகவும்  வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் மஹிந்த ராஜபக்ச அவர்களது மந்திரிசபையில் அங்கத்தவனாக இருந்த வேளை 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்தது. அப்போது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யும் முடிவையும் இக்கட்சி எடுத்தது. கட்சியின் முடிவுகளில் ஒன்றுக்கு கட்டுப்பட்டு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தேன். புகழையும் இகழையும் ஒருசேரப் பெற்ற எனது இராஜினாக் கடிதத்தில் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு பிரார்த்தனையையும், முன்கூட்டிய வாழ்த்தையும் அவருக்கு தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தை மஹிந்த அவர்கள் பல தேர்தல் மேடைகளில் தூக்கிக் காட்டிப் பேசியதை நினைவூட்டுகிறேன். 

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதற்கு ஒத்துக்கொண்டேன். ஆனால்  அத்தேர்தலில்  ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக தேர்தலில் வேலை செய்வதற்கு மறுத்து ஒதுங்கி இருந்தேன்.இறுதி நேரம் வரை மஹிந்த ராஜபக்ச வழங்கிய அமைச்சுப் பதவியில் இருந்துவிட்டு திடீரென்று அவருக்கு எதிராக தேர்தல் வேலைகள் செய்வதற்கு எனது மனச்சாட்சி இடம் தரவில்லை என்று கட்சித் தலைமைக்கு கூறினேன். இந்தப் பிரச்சினை முற்றி இறுதியில் நான் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டேன்

குறிப்பிட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைச்சராகவும், அவர் தலைமை வகித்த கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் எதிர்க்கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட களம் இறங்கியிருந்தார். மஹிந்தவின் கட்சியைச் சேர்ந்தவரே அவருக்கு எதிராக தேர்தலில் இறங்கியுள்ளார், வேறு கட்சியைச் சேர்ந்த நீங்கள் ஏன் எதிராக வேலை செய்ய முடியாது என்று எனது கட்சியைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்கள் சிலர் என்னிடம் காரசாரமாக கேள்வி எழுப்பினர். மைத்திரியும் நானும் 1989ஆம் ஆண்டு ஒன்றாக நாடாளுமன்ற உறுப்பினரானோம். ஆயினும், மைத்திரியின் எதிர் நிலைப்பாட்டை காரணமாக காட்டி எனக்கு மலிவு அரசியல் செய்ய முடியாது என்று அவர்களுக்கு சொன்னேன். திடகாத்திரமாக அன்று நான் எடுத்த முடிவின் காரணமாக  அரசியல் ரீதியில் நான் அதிகம் இழந்திருக்கிறேன். 

மைத்திரி ஆட்சிக் காலத்தில் அவருடன் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நண்பர்களும், மஹிந்த அவர்களுக்கு தேர்தலில் வேலை செய்விட்டு அவர் தோற்ற பின்னர் மைத்திரியுடன் இணைந்து கொண்ட நண்பர்களும் சொன்ன ஆலோசனைகளை நான் ஏற்கவில்லை.
அரசியல் பதவிகளை அலங்கரிப்பதைக் காட்டிலும் அரசியலில் நாணயத்தைக் கடைப்பிடிப்பதையே முக்கியமாகக் கருதினேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இன்றைய ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அன்றைய ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்ச அவர்களை ஆதரித்தே தேர்தல் வேலைகள் செய்தேன். இதனைக் காரணம் காட்டி இன்றுவரை அவரிடம் சென்று நான் எதனையும் கேட்கவில்லை.

கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கே மிக அதிகமான சிங்கள மக்கள் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். 2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுமார் எழுபது இலட்சம் மக்கள் வாக்களித்து கௌரவ கோத்தபாய அவர்களை ஜனாதிபதி ஆக்கியுள்ளீர்கள். இவ்வாக்காளர்களில் மிகப்பெரும்பான்மையோர் சிங்கள மக்களாகும்.எனவே; பெரும்பான்மையான சிங்கள மக்களின் விருப்பத்துக்கு இயைபாக அரசியல் முடிவுகளை  மேற்கொண்ட நான்  கொரோனா தாக்கி மரணிக்கும் முஸ்லிம்களை எரிப்பதை விடுத்து புதைப்பதற்கான அனுமதியை பெற்றுத்தரும் தீர்ப்பை வழங்குமாறும், இந்த எனது விளக்கத்தை உங்களது பிரதிநிதிகள் ஊடாக அரசாங்கத்துக்கும் சுகாதாரத் துறைக்கும் எடுத்துக்கூறவேண்டும் என்றும் பெரும்பான்மை மக்கள் நீமிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். 

பஷீர் சேகுதாவூத்
முன்னாள் அமைச்சர்
தவிசாளர்;
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு
( திறந்த மடல் எனது Page இல் சிங்கள மொழியில் பதிவிடப்படுவதோடு அனைத்து சமூக மற்றும் ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பப்படுகிறது)
நீதி மன்றங்களில் ஜனாசா எரிப்பை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகளும் மற்றோரும் பெரும்பான்மை மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றன Reviewed by www.lankanvoice.lk on மே 17, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.