ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் உளச்சார்பு பரீட்சையில் மோசடி : கிழக்கு மாகாண ஆளுனரிடம் பரீட்சாத்திகள் முறையீடு...
மிகவும் பேசுபொருளாக இருந்த உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி நடாத்தப்பட்ட பரீட்சையின் போது பொது உளச்சார்பு வினாத்தாளில் மோசடிகள் இடம்பெற்று தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கிழக்கின் 03 மாவட்டங்களையும் சேர்ந்த பரீட்சாத்திகள் குழுவினர் ஆளுநரிடம் முறையீடு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் திருகோணமலையில் வைத்து குறித்த மகஜரை பரீட்சாத்திகள் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இடம் கையளித்துள்ளனர்.
இதன்போது தொடுக்கப்பட்ட கேள்விகளுல் ஒரு தனிப்பட்ட நபரின் பயிற்சிப்புத்தகத்தில் இருந்து மாத்திரம் சுமார் 20கேள்விகள் மாற்றங்கள் ஏதும் இன்றி உள்வாங்கப் பட்டிருப்பதாகவும்,இது ஒரு அநீதியானதும் எதிர்காலத்தில் ஒரு பிழையான வழிகாட்டலை முன் வைக்கும் செயற்பாடாகவும் இருக்கிறது, ஒரு அரச பரீட்சையை தனி நபரது வியாபார ரீதியான வழிகாட்டல் புத்தகங்களே தீர்மானிக்கும் மாயை தோற்றம் பெறுவது ஏனையவர்களது வாய்ப்பினை மழுங்கடிக்கச் செய்யும் செயற்பாடாகவே நோக்க வேண்டி உள்ளதாகவும் குறி்ப்பிட்டதுடன்,
கடந்த காலங்களிலும் இது போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்ட போது பரீட்சை ரத்துச் செய்யப்பட்டு மீளவும் நடாத்தப்பட்ட வரலாற்றினை இங்கு சுட்டிக்காட்டி, அதே போன்று இந்தப் பரீட்சையையும் இரத்துச் செய்து மீள நடாத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை வழங்குமாறு பரீட்சாத்திகள் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆளுநர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக பரீட்சாத்திகள் சார்பில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இம்முறைப்பாடு சமர்ப்பிக்கும் வேளை கிழக்கின் திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த தமிழ் ,முஸ்லிம், சிங்கள டிப்ளோமாதாரிகள் பங்கேற்றிருந்ததுடன் தமது ஆதங்கங்களையும் தெளிவாக ஆளுநரின் கவனத்திற்கு எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் உளச்சார்பு பரீட்சையில் மோசடி : கிழக்கு மாகாண ஆளுனரிடம் பரீட்சாத்திகள் முறையீடு...
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 04, 2021
Rating:

கருத்துகள் இல்லை: