மெக்ஸல் ஹாஜியார் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தேசமானி மீராசாஹிபு அவர்கள் எம்மிடையே நடமாடும் பெரும் சமூக சேவகர்
வசதி படைத்தவர்கள் சமூகம் ரீதியாக சிந்திப்பதும், சமூகசெயற்பாட்டாளர்களாக இயங்குவதும் சமூகத்திற்கு கிடைத்த பெரும் வரமெனலாம்.
அந்தவகையில் நீண்ட காலமாக சமூகசேவையில் தன்னை அர்ப்பணித்து, தனது பொருளாதாரத்தை அள்ளிக்கொடுத்து, அனைத்து சமூகத்தவர்களுக்கும் உதவுகின்ற ஒருவர்தான் இந்த மீராசாஹிபு ஹாஜியார்.
எல்லோராலும் மெக்ஸல் ஹாஜியாரென அறியப்பட்டவரும் இயற்பெயரினை மீராசாஹிபுவென கொண்டவருமான இவர் சமூகசேவையில், மனிதாபிமான பணிகளில் சமூக நிறுவனங்களோடு பங்காளியாகவிருந்து செயற்படுவதும், சமூகங்களுக்கிடையில் இனநல்லுறவை வளர்த்தெடுப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படுகின்ற ஒருவரும்தான் இந்த மெக்ஸல் ஹாஜியார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற மும்மொழிகளை சரளமாக பேசக்கூடிய ஆளுமை பெற்ற ஒருவராக இருப்பது இவருக்குள் இருக்கின்ற பெரும் ஆளுமை பண்பு எனலாம். அத்தோடு கவர்ச்சியாக மற்றவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய பேச்சாற்றலும், உலக விடயங்களை தன் அனுபவத்தின் மூலமாகவும், தேடலினூடாகவும் புள்ளி விபரங்களினூடாக அச்சொட்டாய் சொல்வதில், ஒப்புவிப்பதில் பரந்துபட்ட அறிவைகொண்டவர் இவர். பட்டறிவு மூலமாக தன் அனுபவங்களையும், படிப்பறிவு மூலமாக இன்னோரன்ன விஷயங்களையும் ஆழமாக ஊடுறுவி பார்க்கின்ற ஒரு மனிதர்.
மட்டக்களப்பில் வர்த்தகராக இருக்கின்ற மீராசாஹிபு ஹாஜியார் ஒரு அரச உத்தியோகத்தரைப் போல ஆடை உடுத்து, சூ அணிந்து டிப் டொப்பாக கடைக்குள் அமர்ந்திருப்பது இவருக்கான பெரும் அடையாளமாகும். புன்னகை பூத்த முகத்தோடும், நகைச்சுவை கலந்த பேச்சோடும், சுவாரஸ்யமான வாழ்வியல் அனுபவங்களோடும், நாட்டு நடப்புகளோடும் மற்றவர்களோடு உரையாடுகின்ற பாங்கு விசித்திரமானது.
இப்படித்தான் அவருக்கும் எனக்குமான தொடர்பு இலக்கியத்தின் மூலமாக ஏற்பட்டது. அப்போது நான் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிர்வாகியாக இருந்த போது எமது கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவுக்காக நிதி சேகரிப்புக்காக என்னையும் அக்குழுவில் இணைத்திருந்தார்கள்.
நாங்கள் குழுவாக மீராசாஹிபு ஹாஜியாரின் வீட்டுக்குச் செல்கிறோம். விடயங்களை தெரிவித்தபோது, எந்தவித மறுப்புமில்லாமல் உடனடியாக செய்து தருகிறேனென கூறி விழாவுக்கான மற்றைய வேலைகளை செய்யுமாறு கூறி தானும் சில பொறுப்புக்களை பொறுப்பெடுத்துக் கொண்டார்.
அன்றிலிருந்து எனக்கும் அவருக்குமான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக விசாலிக்கத் தொடங்கியது. அவரை நான் அப்போதெல்லாம் ஒரு வியாபாரியாகவும், ஒரு தனவந்தராகவுமே நான் நினைத்துக்கொண்டிருந்தேன். பிற்பட்ட நாட்களில்தான் என்னால் அறியமுடிந்தது அவரொரு சமூகசேவகரெனவும், இலக்கியப் பிரியரெனவும்.
2016 ஆம் ஆண்டு மருதமுனையில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவிற்கு பேராளர்களை ஒன்றுசேர்க்கின்ற பொறுப்பு என்னிடம் விழாக்குழுவினரால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் கலை, இலக்கிய நண்பர்களை திரட்டியபோது மெக்ஸல் ஹாஜியார் தானாக அழைப்பை ஏற்படுத்தி தன்னையும் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டார்.
நானும் சரியென குறிப்பிட்டு அவரது பெயரையும் இணைத்துக்கொண்டேன். குறித்த விழா தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம்பெற்றது. அந்த விழாவில் முழுமையாக அவரும் பங்கெடுத்து, எம்மோடே இரவுப் பொழுதை கழித்து, உண்டு மகிழ்ந்து, நகைச்சுவை பேசி எங்களோடே எங்கள் வயதை ஒத்தவராக மாறியதை என்னால் இன்றுகூட மறக்க முடியாத இன்பத் தருணமாக என் மனதுக்குள்ளே ஊஞ்சலாடுகிறது.
மெக்ஸல் ஹாஜியார் என்பதற்கு பின்னால் நிறையவே சுவாரஸ்யங்கள் இருக்கிறது. காத்தான்குடியில் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல்யம் வாய்ந்த தொழில் ஸ்தாபனமான மெக்ஸல் ஹாட்வெயாரினை காத்தான்குடி பிரதான வீதியில் தான் வைத்திருந்ததாகவும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தனது கடை எறியூட்டப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர்தான் மட்டக்களப்பில் கடை திறந்ததாகவும், இதன் பின்புதான் தமிழ், சிங்கள மக்களோடு ஒட்டி உறவாட கிடைத்ததாகவும் அந்த பின்னணியில்தான் மக்கள் தன்னை மெக்ஸல் ஹாஜியாரென அழைத்ததாகவும் ஆரம்பத்தில் என்னிடம் சொன்ன ஞாபகம் எனக்கு.
கலையை, இலக்கியத்தை நேசிக்கின்ற ஒருவராக இவர் இருப்பது என்னைப்போன்ற கவிஞர்களுக்கு, கலைஞர்களுக்கு கிடைத்த பெரும் வரமெனலாம். எனது முதலாவது கவிதைத் தொகுதியான "மூன்றாம் சாமத்து புன்னகை" கவிதை நூல் வெளியீட்டின் போது முதல் பிரதியை பெற்றது இன்னும் எனக்குள்ளே நீங்காத நினைவாகவே இருந்து கொண்டிருக்கிறது.
இவர் மட்டக்களப்பு மாவட்ட சென்ஜோன்ஸ் அம்புலன்ஸின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவிருந்து மனிதாபிமான செயற்பாடுகளை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து சமூகத்தினருக்கும் உதவிவருவதோடு, கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக இருந்து வறுமையில் வாடுகின்ற மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி ஊக்கப்படுத்துவதோடு, தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களை தேர்வுசெய்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய ரீதியில் பரிசில்களையும், சான்றிதழ்களையும் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினூடாக வழங்கிவருகிறார்.
அதுமாத்திரமல்லாமல் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு குழுவின் (கபே) மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவிருந்து செயற்பட்டுவருவதுடன், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் நிறைவேற்று அங்கத்தவராகவிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவுற்றிருக்கின்ற மக்களின் வாழ்வியலில் ஒளியை ஏற்றிவைக்க சகோதர சமூகத்தோடு இணைந்து அள்ளும் பகலும் பாராது சிறப்புற இயங்குகின்ற சிறந்த சமூகசேவகனாக ALM.மீராசாஹீபு அவர்களை நான் பார்க்கிறேன்.
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வியை தொடர்ந்த இவர், சகோதர சமூகத்தவரோடு எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதிலும், அவர்களின் பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல் அம்சங்களை நன்கு அறிந்தவராக இருப்பதனால் அன்றிலிருந்து இன்றுவரை தான் கல்வி கற்ற பாடசாலையோடு தொடர்பிலேயே இருந்து வருகின்றார். இதற்கு சான்றாக இவர் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவராக இன்றும் செயற்பட்டு வருகின்றார்.
உண்மையில் மனித வாழ்வென்பது குறிப்பிட்ட காலமேயாகும். ஆனாலும் தான் வாழும் காலப்பகுதியில் தன்னால் முடிந்ததை சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஏதாவது செய்துவிட வேண்டுமென நினைப்பது, செய்வது பெரிதொரு வரமாகும். இப்படியான எண்ணங்களை இறைவன் எல்லோருடைய மனதிலும் தூவி விடுவதுமில்லை, கொடுத்துவிடுவதுமில்லை.
ஆனாலும் இவரைப் போன்ற களத்தில் நின்று செயலாற்றுகின்ற தனவந்தர்களின் வாழ்வில் அல்லாஹ் இன்னுமின்னும் அவனது அருளினை அள்ளிக்கொடுக்கவும், தேகராக்கியத்தோடு வாழவும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக! "ஆமீன்"
எம்.ரி.எம்.யூனுஸ் - #காத்தநகரான்
மெக்ஸல் ஹாஜியார் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தேசமானி மீராசாஹிபு அவர்கள் எம்மிடையே நடமாடும் பெரும் சமூக சேவகர்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 09, 2021
Rating:

கருத்துகள் இல்லை: