சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகள்
எனது அம்மாவும் அப்பாவும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள். நான் படிப்பில் மிகவும் திறமை மிக்கவர்.நான் படித்து டாக்டராக வேண்டும் என்ற ஆசையே எனக்கும் என் பெற்றோர்களுக்கும் இருக்கிறது.ஆனால் எமது பாடசாலையின் கல்வி வாழ்வு இதற்கு மறுபக்கமாகவே அமைந்திருக்கிறது.
யானைகள் நடமாடும் சிங்கராஜ காட்டை அண்மித்து அமைக்கப்பெற்றிருக்கும் எமது தற்காலிக கட்டிடத்தில்தான் மிக ஆபத்தான நிலையில் நாம் எமது கல்வியைத் தொடர்கிறோம்.
இந்த தற்காலிகக் கட்டிடம் ஒரு மடுவம் போன்றுள்ளது.மழை பெய்யும்போம் பலமான காற்று வீசும் போதும் நாங்கள் மிகவும் பயப்படுகின்றோம்.சிலபோது கூறைத் தகடுகள் காற்றில் பறக்கின்றன.
மொத்தத்தில் நாங்கள் ஒரு அரச பாடசாலையில் படிக்கின்ற மாணவர்கள் என கூறுவதற்கே வெட்கமாக இருக்கிறது என டிப்டீன் இலக்கம் 2 தமிழ் பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் ஸீ.கயாத்திரி தெரிவிக்கிறார்.
நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலை இறக்குவானை நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டு வரலாற்றை அண்மித்துள்ள டிப்டீன் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயம் இங்குள்ள நூற்றுக்கணக்கான ஏழை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்காலக் கணவுகளை உண்மைப்படுத்த கடமைப்பட்டுள்ள ஒரு பாடசாலையாகும்.
ஆனால் யதார்தத்தில் இப்பாடசாலையை சுற்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விரோதமான நடவடிக்கைகள் பலதால் பல தசாப்த காலமாக டிப்டீன் பாடாலை தனது தனித்துவத்தை இழந்து அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு எண்ணக்கருவாகவே இப்பாடசாலை மாறிக்கொண்டிருக்கிறது.
டிப்டீன் பாடசாலை வளாகத்திற்கு அருகில் தோண்டப்பட்ட சட்ட விரோதமான மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகளால் பாரிய மண்சரிவு அபாயாத்தை எதிர்நோக்கியிருக்கும் இப்பாடசாலையின் கட்டிடங்களுக்கும் பாரிய சேதம் இடம்பெற்றுள்ளதாக அதன் அதிபர் தெரிவிக்கிறார்.
டிப்டீன் பாடசாலை கட்டிடங்களுக்கு நேர்ந்துள்ள அனர்த்த பாதிப்புக்களை கருத்திற்கொண்டு இரத்தினபுரி மாவட்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் உடனடியாக அங்கிருந்து மாணவர்களை அகற்றுமாறும் அவ்விடத்தில் பாடசாலை நடத்திச் செல்ல வேண்டாம் எனவும் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி கட்டளை பிறப்பித்துள்ளது.
மேற்படி தினம் பாடசாலைக்கு வருகை தந்துள்ள அரச அதிகாரிகள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக உயர் அதிகாரிகள் பலர் “பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ள மண்சரிவு அபாயத்தினால் பாடசாலைக்கு ஏற்படும் பாதிப்புக்களை விடவும் இரத்தினக்கல் பெறும் நோக்குடன் நிலத்துக்கு கீழால் அகழப் பட்டுள்ளாதால் குறித்த கட்டிடம் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்பாராத பாரிய நெருக்கடியை எதிர்நோக்கிய தரம் ஒன்று முதல் ஒன்பது வரை படிக்கும் 71 மாணவர்களும் அதிபருடன் இணைத்து 7 ஆசிரியர்களும் தமது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர மாற்றிடம் தேடி அலைய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
டிப்டீன் தோட்டத்திற்கு அருகிலுள்ள விகாரையில் அம்மாணவர்களை தங்க வைக்குமாறு அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்தை பணித்திருந்திருந்த போதிலும் பாதுகாப்புப் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பாடசாலை நிர்வாகம் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
இதற்குப் பதிலாக டிப்டீன் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு அருகில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த கலாச்சார நிலைய கட்டிடத்தில் தற்காலிக பாடசாலை கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இத்தற்காலிகப் பாடசாலை அமையப் பெற்றுள்ள இடம் சிங்கராஜ வனத்தை அண்மித்த தோட்டம் என்பதால் காட்டு யானைகளின் தொந்தரவும் காலநிலை அனர்த்தங்களும் தொடர்ந்திருப்பதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலார் தெரிவிக்கிறார்.
உலகின் மிகப் பெறுமதியான இரத்தினற் கற்களுக்கு உரிமை கோரும் இரத்தினபுரி மண்ணில் சட்ட விரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் இன்று நேற்றுத் தோன்றிய புதிய விடயங்கள் அல்ல.கடந்த ஐந்தாண்டில் மாத்திரம் இரத்தினபுரி மாவட்டத்தில் 185 இற்கும் மேற்பட்ட சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்பதை சபரகமுவ மாகாண இரத்தினக்கல் அதிகார சபையின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
அரசியல் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சட்டவிரோதமான அன்பளிப்புக்கள் ஊடாக நேரடியாகவும் மறை முகமாகவும் தொடரும் மேற்படி மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகளால் இரத்தினபுரி மாவட்டத்தைச்சேர்ந்த பல தரப்பினரும் பாரிய அசௌகரியங்களையும் இழப்புக்களையும் சந்திக்கின்றனர் என இரத்தினபுரி மாவட்ட சர்வ மத குழுவின் தலைவர் சோமரத்ன தேரர் குற்றம் சாட்டுகிறார்.
கஹவத்தை கப்பளையை சேர்ந்த எஸ்.அமிலா விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில் எமது பகுதியும் இரத்தினக்கல் வளம் மிகுந்த இடமாகும். நகரத்திலிருத்து சற்றுத் தொலைவிலுள்ள எமது கிராமத்திலும் சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கிறது.
பாரிய கணரக இயந்திரங்களை பயன்படுத்தி நிலங்கள் அகழப்படுவதால் நாம் பயணிக்கும் பொதுப் பாதை தாழிறங்கியுள்ளது.
எமது வீட்டின் சுவர்களிலும் பாரிய வெடிப்புங்கள் ஏற்பட்டுள்ளன.முன்பகுதி நிலமும் தாழிறங்கியுள்ளது.
சட்டவிரோதமான அகழ்வு பணியில் ஈடுபடும் இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் அமுல் படுத்தப்படுவதும் இல்லை. இதுதான் எமது தலைவிதி என அவர் தனது மன வேதனையை முன்வைக்கிறார்.
இறக்குவானை டிப்டீன் தோட்டம் கஹவத்தை கப்பளை பகுதிகளில் மாத்திரம் அல்ல.இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் சட்ட விரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் மறை முகமாக தொடர்கிறது.
கஹவத்தை கோட்டக் கல்வி பணிப்பாளர் திருமதி நயோமி உதய காந்தியிடம் இது தொடர்பில் நாம் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் தந்தார்.
எமது கஹவத்தை கோட்டக் கல்விப் பிரிவிலுள்ள ஒருசில பாடசாலைகளின் கட்டிடங்களுக்கு சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைளால் ஆபத்துக்கள் நேர்ந்துள்ளன.
குறிப்பாக கஹவத்தை யாஇன்ன வித்தியாலயம் மற்றும் கஹவத்தை கெட்டேதென்ன தமிழ் வித்தியாலயம் உட்பட நாவலக்கந்த பகுதியிலுள்ள சில பாடசாலைகளுக்கும் பாதிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.நாம் இது தொடர்பில் உரிய மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் மதிப்பீடு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வுள்ளோம் என அவர் தெரிவிக்கிறார்.
தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி சட்ட விரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாடசாலைகளின் தரவுகள் மற்றும் பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகள் உட்பட சட்ட விரோதமான அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து பாடசாலை வளத்திற்கு சேதம் விளைவித்த தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நிவித்திகல கல்விப் பணிப்பாளர் மற்றும் சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு பொறியலாளர் அபித வனசுந்தவிடம் சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் எப்படியான பாதிப்புக்களை விளைவிக்கின்றன? என நாம் அவரிடம் கேட்ட போது
இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு இரத்தினக்கல் அதிகார சபையே அனுமதி வழங்கி வருகிறது.
எனினும் மிகப் பரந்த கைவிடப்பட நிலங்களிலும் நிதிகளை அண்மித்த இடங்களிலும் தமது குடியிருப்பு பகுதிகளிலும் சட்ட விரோதமான அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எந்தவொரு விஞ்ஞான தொழில் நுட்ப உத்திகளையும் பின்பற்றாமல் வெறும் மரபு ரீதியாக மாத்திரம் மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வு நடவடிக்கைகளால் எமது பௌதிக வளம் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.
சில இடங்களில் செங்குத்தாகவும் மற்றும் சில இடங்களில் நெடுங் கீழாவும் 150, 200 அடிகள் வரை தோண்டப்படுவதால் நிலத்தின் கீழ் பாரிய வெடிப்புக்களும் இடைவெளிகளும் தோற்றம் பெறுகின்றன.
இன்னும் சில இடங்களில் கணரக இயந்திரங்களை பயன்படுத்தியும் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இவைகள் அனைத்தும் சூழல் பாதிப்புக்களை தோற்றுவிக்கும் மோசமான செயற்பாடுகளாகும்.இன்னும் சில வருடங்களில் அனர்த்தங்கள் நிறைந்த மாவட்டமாக இரத்தினபுரி மாறலாம்.இதனை தவிர்ப்பதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் தரவுகளுக்கிணங்க கஹவத்தை மற்றும் பெல்மதுல்லை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களிலேயே அதிக அளவிலான சட்ட விரோதமான மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன என அத்தரவுகள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் திருமதி மாலனி லொக்குபோதாகமவிடம் எப்படியான நடவடிக்கைகள் ஊடாக சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளை கட்டுப்படுத்த முடியும் என அவரிடம் கேட்டோம்.அதற்கு அவர் பதில் அளிக்கையில்
கணரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சூலழுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கஹவத்தை பகுதியைச் சேர்ந்த பலர் தமுது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.பல அரச கட்டிடங்களுக்கு தொடர்ச்சியான பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இரத்தினக்கல் வியாபார சமூகத்தின் உதவி மிகவும் மிக அவசியம்.பொலிசார் மற்றும் இரத்தினக்கல் அதிகார சபையின் ஒத்துழைப்புடன் மேற்படி சட்ட விரோதமான அகழ்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இரத்தனபுரி மாவட்ட செயலகம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் தெரிவிக்கிறார்.
சட்டவிரோதமான இரத்தினக்கல் அகழ்வினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகள்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2022
Rating:

கருத்துகள் இல்லை: