Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னாள்.


(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)

அண்மையில்  ஹட்டன் பதில் நீதவான் அலுவலகம் முன்புறமாக இளைஞர், யுவதிகள் கூடியிருந்தனர். ஏறத்தாழ 30 பேர் அளவில் இருப்பர். பார்க்க படித்தவர்களாவும் ஓரளவு வசதியானவர்களாகவும் எனக்கு தென்பட்டனர். பல்கலை மாணவரோ எனவும் யோசித்தேன். விசாரித்த போது  அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து "குடு" - போதை பொருள், வீதி சோதனை பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் சந்தேக நபர்கள் பதில் நீதிவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டதாக அறிந்தேன்.

நாளைய தாய், தந்தையர் இன்னும் நாட்டின் நாளைய தலைவர்கள், தலைவிகள் ஆகியோரின் இன்றைய இந்நிலை பற்றி சிந்திக்க, தலை சுற்றுகிறது. எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கிறது. 

நாம் எங்கே தவறிழைத்தோம்? குடும்பச் சுற்றாடலிலா? பாடசாலை, பல்கலை சுற்றாடலிலா? சமூகச் சுற்றாடலிலா? 

பரீட்சை மைய பொதுக் கல்வி, பல்கலை கல்வி அமுலாக்கமானது பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியத்தை பாதித்துள்ளது போல் உள்ளது. தத்தமது பிள்ளைகளுக்காகப் பெற்றோர் சிறுவர் பாடசாலை, பொதுக் கல்விப் பாடசாலை தெரிவுகளில் வெளிப்படுத்துகின்ற முனைப்பான செயற்பாடுகள், பிள்ளைகளது பழக்க வழக்கங்களிலும் சமூக நடவடிக்கைகளிலும் குடும்ப, சமூக மட்டத்தில் தேவையான அளவில் வெளிப்படுத்தப்படவில்லையோ என எண்ணத் தூண்டுகிறது.

ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் கற்க வேண்டிய பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி நிலைகளில், பிள்ளைகளது கல்வி அடைவுமட்டத்தை மதிப்பிட புள்ளி வழங்கி, நிறத்தால் வேறுபடுத்திக் காட்டி வரிசைப்படுத்தி, முதல் மூவருக்கு காட்டுகிற கல்வி அமைப்புக்களின் கணிப்பும் பாராட்டும் நிலை, அரச அமைப்புக்களிலும் சமூக அமைப்புகளிலும் தொடர்கிறது. பொதுப் பரீட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்க்கான இந்த "சன்மான", ஊக்குவிப்பு நடவடிக்கைகளானவை எல்லாப் பிள்ளைகளையும் உயரத்தில் சமமானவர்களாக ஆக்கும் ஒரு முயற்சியோ என்ற மாயையை பெற்றோரிடையே ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது. 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை, அதற்காக பாடசாலைகளும் கல்வி அமைச்சும் காட்டுகிற அதிகரித்த அக்கறையானது பிள்ளைகளிலும் பெற்றோரிலும்  கற்பிக்கும் ஆசிரியரிலும் உளச்சுமையை ஏற்படுத்தி வருகிறது. ஏன் இந்த 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது? 

எல்லாப் பிள்ளைகளுக்கும் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வியூட்டம் என 1945 இலிருந்து மார்தட்டி வருகின்ற அடுத்தடுத்த அரசாங்கங்கள் யாரை திருப்திபடுத்த முயன்று வருகின்றன?  பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகின்ற பிள்ளைகளுக்கு விசேட உதவி வழங்கவா? இவர்களை வேறு வழிகளில் அடையாளப்படுத்த முடியாதா? பெருமளவு அரச அமைப்புகள், குடும்ப மற்றும் பிரதேச மட்டங்களில் இப்போது உள்ளனவே. அவற்றின் வாயிலாக நலிவுற்ற குடும்பங்களில் இருந்து வருகின்ற பாடசாலைக்குச் செல்லும் வயதெல்லையில் உள்ள பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்கு உதவும் வழிவகை இல்லையா? மட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களை வைத்துக்கொண்டு அங்கேயும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை சித்தி, பல்கலைக்கழகத் தெரிவுக்குத் தகைமை பெற்றோர், வெட்டுப்புள்ளி, பின்தங்கிய மாவட்டங்களுக்கான தெரிவுப் பிரமாணங்கள் எனப் பலதரப்பட்ட உபாயங்களைக் கையாண்டு பலரையும் திருப்திப்படுத்த முயன்று ஒருதொகுதியினர்க்கு உயர்கல்வி வாய்ப்பு அளிக்க முயலும் ஏற்பாடுகள் இருக்கும் வரை எதிர்கால சந்ததியினரிடையே தனிமனித ஆளுமையை கலாசார, சமய மனிதநேய விழுமியங்களுடன் கட்டியெழுப்ப முடியாது.

வைத்தியப் பேராசிரியர், வைத்திய கலாநிதி என்போரும் சட்டவிரோத சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளிலும் விற்பனையிலும் நாடு கடந்து சர்வதேச ரீதியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்கிறது. போதைப் பொருள் வியாபாரம் பெரும் எடுப்பில் நடைபெற்று வருகிறது. மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன. ஊழல்களும் மலிந்துள்ளன. குற்றச் செயல்களும் அதிகரித்தவாறு உள்ளன. நாம் எங்கே செல்கிறோம்? நமது பிள்ளைகள் எங்கே செல்லவுள்ளனர் என்பதை அனைத்து தாய் தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் இது.

ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னாள். Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 24, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.