Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மேலதிக ஆசிரியர்களால் நிரம்பிக் குவியும் கிராமியப் பாடசாலைகள்

(எம்.எல்.எஸ்.முஹம்மத்)

கடந்த 2022 மே மாதம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி கணிதம் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் சித்தியடையத் தவறியதால்  தனது எதிர்காலக் கனவு தொலைந்து  விட்டது என வருத்தப்படும் கஹவத்தை வெள்ளந்துரை சிங்கள மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த  மாணவி எஸ்.செவ்வந்தி தேவிகா கண்ணீர் மல்க தனது கதையை இவ்வாறு ஆரம்பித்தார்.


சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டு அநாதையான நான் கஹவத்தைப் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறேன்.

இயல்பிலே படிப்பில் எனக்கிருந்த ஆசை மற்றும்  திறமையினால் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலும் மிகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்று சித்திபெற்றேன்.

எல்லோருக்கும் போல் எனக்கும் எதிர்காலத்தில் வைத்திய நிபுணராக பட்டம் பெற்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற வேண்டும் என சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டேன்.

எனினும் மிகவும் பின்தங்கிய பிரதேசப் பாடசாலையான எமது பாடசாலைக்கு கடந்த பல வருடங்களாக  கணித விஞ்ஞான மற்றும் ஆங்கில பாடங்களுக்கான நிரந்தர ஆசிரியர்கள்  இல்லை.

தரம் 6 முதல் கணித அறிவு எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.எனது சொந்தத் திறமையை அடிப்படையாகக் கொண்டுதான் மேற்படி பரீட்சைக்கும் தோற்றினேன். ஆனால் சித்திபெற முடியவில்லை.


எனது எதிர்காலக் கனவு தொலைந்து விட்டது.எமது பாடசாலைக்கும் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் நானும் தேசத்திற்கு அரும்பணியாற்றும் வைத்தியர்களுள் ஒருவராக உருவாக இடமிருந்திருக்கும் என தனது தொலைந்து போன ஆசைக்காக மிகவும் வருத்தப்பட்டார்.

சுதந்திர இலங்கையின் முதற் கல்வி அமைச்சர் சீ.டப்ளியு.கண்ணங்கர அவர்களால் 1947 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட இலவசக் கல்விக் கொள்கை மூலம்  நாட்டில் பல ஆரோக்கியமான திருப்பங்களும் மாற்றங்களும் தோன்றின. குறிப்பாக அனைவருக்கும் சமத்துவமான கல்வி என்ற சிந்தனையும் கூடுதலாக வலுப்பெற்றன.


எனினும் இலங்கையில் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகள் என 9986 பாடசாலைகள் உள்ளன. மேற்படி அனைத்துப் பாடசாலைகளிலும் மொத்தமாக 13570 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. எனினும் அனைத்து மாகாணங்களிலுமுள்ள பல பாடசாலைகளில் 40,000 இற்கும் மேற்பட்ட பல ஆசிரியர்கள் மேலதிக ஆசிரியர்களாக உள்ளனர்.

இலங்கை அரசும் வருடாந்தம் 100 கோடிகளுக்கும் மேற்பட்ட தொகையை இவர்களுக்கு  சம்பளமாக வழங்குவதற்கு  செலவளிக்கின்றது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள்  சுட்டிக்காட்டுகின்றன.


தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் அமைந்துள்ள நாப்பாவெள முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இரண்டு ஆசிரியர்கள் நேரசூசி இன்றி மேலதிக ஆசிரியர்களாக உள்ளனர்.கடந்த மூன்று  வருடங்களுக்கும் மேற்படி இரு ஆசிரியர்களுக்கும் சம்பளமென 36 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை அரசு செலவு செய்துள்ளதாக அப்பாடசாலையின் பிரதி அதிபர்   தெரிவிக்கிறார்.
அத்துடன் மேற்படி பாடசாலையில் பல ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள். சிலர் பத்து வருடங்களுக்கும் மேலாக அதே பாடசாலையில் ஆசிரியர் பணியில் இருக்கின்றனர்.

ஒரே பாடத்தை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் இருக்கின்ற நிலையில் குறைந்த பாடவேளைகளைக் கொண்ட நேரசூசியையே அவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

நாப்பாவெள முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாட நேரசூசியின்றி சம்பளம் பெற்றுவரும் ஆசிரியர்களை சேவையில் ஈடுபடுத்தும் நோக்குடன் க.பொ.த.உயர்தர வகுப்புக்களுக்கு  மேலதிக பாடங்களாக மனையியல் மற்றும் சித்திரம் உட்பட ஊடகக் கற்கைகள் போன்ற மேலதிக பாடங்களை ஆரம்பிக்க தான் எதிர்பார்த்திருப்பதாக பிரதி அதிபர் மேலும் தெரிவிக்கிறார். எனினும் குறித்த பாடசாலையில் மேற்படி பாடங்களை கற்பதற்கு போதிய மாணவர்கள் இல்லை என்ற விடயம் எமது தேடலின்போது தெரிய வந்தது.
சபரகமுவ மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் சபரகமுவ மாகாணத்தில் மாவனல்லை கல்வி வலயத்திலேயே தமிழ் மொழி மூல மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

இங்கு மாத்திரம் 287 ஆசிரியர்கள் முறையான நேரசூசியின்றி பாடசாலையில் உள்ளனர்.குறைந்த வெட்டுப் புள்ளிகளுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய பீடத்தில் பட்டப் பாட நெறியை நிறைவு செய்துள்ள இவர்களால் ஏனைய பாடங்களை கற்பிக்க முடியாதுள்ளது.

மாகாண கல்வி அமைச்சு வெற்றிடம் மிக்க பாடசாலைகளுக்கு இவர்களை நியமித்திருந்த போதிலும் போலி மருத்துவ சான்றிதழ்களையும் அரசியல் அழுத்தங்களையும் பயன்படுத்தி தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொள்கின்றனர்.

அதிபர்களும் இவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக போலித் தரவுகளையே சமர்ப்பிக்கின்றனர்.இந்த விடயத்தில் 6/2021 சுற்றறிக்கை அமுல்படுத்தப்படுமானால் ஒரளவு இப்பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர்.
மேற்படி மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளரின் கருத்தை உண்மைப்படுத்தும் வகையில் தகவல் அறியும் சட்ட மூலத்தைப் பயன்படுத்தி மாவனல்லை வலயத்திலிருந்து  பெறப்பட்ட தகவல்களில் இவ்விடயம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

82 மாணவர்களைக் கொண்ட மாவனல்லை அல்ஜலால் பாடசாலையில் 12 ஆசிரியர்களும் 270 மாணவர்களுள்ள தெல்கஹகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 23 ஆசிரியர்களும் 226 மாணவர்கள் படிக்கும் தம்மவிட கனிஷ்ட பாடசாலையில் 18 ஆசிரியளும் உள்ளனர்.

மேற்படி மூன்று பாடசாலைகளிலும் பெருமளவிலான மேலதிக ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும் அது தொடர்பான உண்மைத் தகவல்களை மேலதிகாரிகளுக்கு குறித்த பாடசாலை நிர்வாகங்கள் தொடர்ந்தும் தவறி வருகின்றன என்பதும் எமது தேடல் முயற்சியின் போது தெளிவாக அறிய முடிந்தன.

கல்வி அமைச்சின் 6/2021 இலக்க சுற்றறிக்கைகிணங்க பாடசாலையில் கடமையில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் தொடர்பில் பூரண விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலையில் கடமை புரியும் ஆளணியினர் தொடர்பில் கோட்டக் கல்வி மற்றும் வலயக் கல்வி உட்பட மாகாண கல்வித் திணைக்களங்கள் ஊடாக அடிக்கடி தரவுகள் சேகரிக்கப்பட்டு அறிக்கை படுத்தப்பட்டு வருவதாக கஹவத்தை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி நயோமி உதயகாந்தி தெரிவிக்கிறார்.

எனினும் பாடசாலைகளில் உரிய நேரசூசியின்றி  மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிபர்களால் பல தந்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் கஹவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஒழுங்கு செய்திருந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சபரகமுவ மாகாண  உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் கருத்து தெரிவிக்கையில் சபரகமுவ மாகாணத்தில்  நிவித்திகல கல்வி வலயத்திலுள்ள  தமிழ் மொழி மூல பாடசாலைகளிலேயே  மித அதிக அளவான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு கடந்த பல வருடங்களாக பல முயற்சிகளை நாம் முன்னெடுத்து வந்த போதிலும் இப்பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் மிகக் குறுகிய காலத்தில் இடமாற்றங்களை பெற்று தமது ஊர் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.இதனால் இங்குள்ள  மாணவர்கள் பாரிய அளவில்  பாதிக்கப் படுகிறனர்.இந்த ஆசிரியர்களின் சட்டவிரோதமான இடமாற்றங்களுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்கிறார் அவர். நிவித்திகல வலயத்திலுள்ள கஹவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த பல வருடங்களாக விஞ்ஞானம்,தகவல் தொழில் நுட்பம் உட்பட மற்றும் ஆங்கிலம் உட்பட பல பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லையென அதன் அதிபர் எம்.எம்.எம்.பாஹிம் தெரிவிக்கிறார்.

அரசியல் அழுத்தங்கள் மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகள்  ஊடாக இடமாற்றம் பெற்றுவரும் ஆசிரியர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்குடன் பல அதிபர்கள் பல்வேறு வகையான உத்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தரம் 6 முதல் 11 வரையான மாணவர்களுக்கு  முதலாம் இரண்டாம் மூன்றாம் தொகுதிப் பாடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், க.பொ.த.உயர் தரத்திற்கான பாட எண்ணிக்கையை அதிகரித்தல், புதிய நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கி மேலதிக ஆசிரியர்களை அப்பொறுப்புக்களுக்கு நியமித்தல் உட்பட பாடசாலையில் புதிய பிரிவுகளை உருவாக்கி அதற்கு மேலதிக ஆசிரியர்களை நியமித்தல் உட்பட உளவியல் ஆலோசகர் என்ற பெயரில்  மேலதிக ஆசிரியர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக  மேற்படி மேலதிக ஆசிரியர்கள் அதிபர்களால் பாதுகாப்பட்டு வருவதாக  மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஏ.எம்.நிஸ்தார்  தெரிவிக்கிறார்.

கல்வி அமைச்சின் 2021/6 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கிணங்க  மிகக் குறைவான மாணவர் தொகையைக் கொண்ட பாடசாலைகளில் பிரதி அதிபர் மற்றும் உப அதிபர் உட்பட உதவி அதிபர்கள் நியமனம் செய்ய முடியாது என
அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நடை முறையில் 50 மாணவர்களை விடவும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளிலும் பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல அதிபர்கள் மத்தியில் போதிய தெளிவுகள் காணப்பட வில்லை என்பதையும் எமது தேடலின் போது அறிய முடிந்தன.
அரசியல் அழுத்தங்களைப் பயன்படுத்தி ஆசிரிய இடமாற்ற செயற்பாடுகள் நாட்டின் பல இடங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் பெறும் பல ஆசிரியர்கள் தமது ஊர் பாடசாலைகளில் குவிய ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி ஆசிரியர்களை மேலதிக ஆசிரியர்களாகக் கருதி அதிபர்கள்  உரிய இடமாற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் அழுத்தங்களும் ஊர் அழுத்தங்கள் பாரிய தடைகளாக அமைந்திருப்பதாக முன்னாள் அதிபர் நிஸ்தார் தெரிவிக்கார்.

இலங்கையின் கல்வித் துறை எதிர்நோக்கும் மிக முக்கிய சவால்களில் ஒன்றாக மேலதிக ஆசிரியர்கள் பிரச்சினை அமைந்துள்ளது. இதனால் வருடந்தோறும் 100 கோடிகளுக்கு மேல் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது.

இது தொடர்பில்  ஊடகங்ளும் சமூக நிறுவனங்களும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.கல்வித் துறையில் இடம் பெறும் தொடர்ச்சியான தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.அரச நிருவாகம் இதற்கான மாற்றுத் திட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். கல்வி அமைச்சு ஆசிரிய மனத வள முகாமைத்துவம் தொடர்பில் விளைதிறன் மிக்க செயற்பாடுகளை வெளிக்கொண்டுவர வேண்டும்.
மேலதிக ஆசிரியர்களால் நிரம்பிக் குவியும் கிராமியப் பாடசாலைகள் Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 24, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.