ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் இரு பெரும் விழாக்கள்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்திலிருந்து (தேசிய பாடசாலை) பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியர்களுக்கான கௌரவிப்பு விழாவும் மாணவத்தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலை முதல்வர் ஏ.எல் அபுல்ஹசன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றமீஸ் அவர்களும் கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பாதுகாப்பபு தலைமையகத்தின் இரண்டாம் கட்டளையிடும் அதிகாரி மேஜர் தீபிகா சமரவீர, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் பிரதிநிதியாக பெண்கள், சிறுவர் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஈ.எல்.பதுர்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ்) ஏ.எம்.முபாஸ்தீன், ஆசிரிய ஆலோசகர்கள் ஏ.எல்.ஏ.சலாம், ஆங்கில வளவாளர் எம்.ஐ.சித்தீக், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயீல், கிராமசேவை உத்தியோகத்தர் கே.பாத்திமா மதீனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பெற்றார் சார்பில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார், பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளரும் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான கே.எல்.அஸ்மி, கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் எம்.எம்.தாஹிர் மெளலவி மற்றும் கல்வி வலய அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவிகள் எனப்பலர் கலந்து கொண்டார்.
பாடசாலை அதிபர் தனது ஆரம்பவுரையில்,
இப்பாடசாலை தற்போது நேர் கலைத்திட்டம் மற்றும் மறைகலைத்திட்டங்களில் வளர்ச்சி பெற்று வருவதற்கு இவ்விழா ஒரு சான்றாகும்.
மாணவியர்களுக்கான மறை கலைத்திட்ட வளர்ச்சியில் இலங்கை இராணுவத்தின் கிழக்கு மாகாண தலைமையகத்தின் பெண்கள் இராணுவப்பிரிவினர் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவது எமது பாடசாலை மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதம அதிதி தனதுரையில்,
ஒரு பாடசாலை தங்களுக்குச் செய்கின்ற அதியுச்ச உதவி மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்வதாகும். அதனை இப்பாடசாலை மாணவர்களுக்கு திட்டமிடலுடன் செய்திருக்கின்றது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளை பல்கலைக்கழகம் செல்கின்றது என்பதனால் மிக்க மகிழ்சியடைவர். அத்துடன், இப்பாடசாலை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு மும்மொழிகளிலும் இடம்பெறுவதனைப் பாராட்டுவதாகவும் தனதுரையில் தெரிவித்தார்.
கெளரவ அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண பாதுகாப்பு தலைமையகத்தின் இரண்டாம் கட்டளையிடும் அதிகாரி மேஜர் தீபிகா சமரவீர உரையாற்றுகையில்,
இன்று இலங்கையில் 52 சதவீதமான பெண்கள் உள்ளனர். ஆனால், பெண்கள் தலைவர்களாக வருவது அல்லது தலைமைத்துவங்களைப் பெறுவதற்கு அவர்கள் அவர்களது குடும்பச்சுமையைப் பொருட்டாகக் கருதுகிறார்கள்.
தலைவிகளாக வருவதற்கு மாணவத்தலைவிகளான உங்களிடம் அர்ப்பணிப்பு, தியாக சிந்தனை, கடின உழைப்பை இந்த நேரத்திலிருந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இப்பாடசாலைக்கு கிழக்கு இராணுவ தலைமையகத்திலுள்ள பெண்கள் பிரிவினரால் விளையாட்டு, கடெட், தலைமைத்துவப்பயிற்சி, முதலுதவிப் பயிற்சிகளை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், மாணவத்தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வை கிழக்கு பாதுகாப்பபு தலைமையகத்தின் இரண்டாம் கட்டளையிடும் அதிகாரி மேஜர் தீபிகா சமரவீர ஆரம்பித்து வைத்தார்.
2021ம் ஆண்டில கலை வர்த்தக மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் க.பொ.த உயர்தரம் எழுதி தற்போது பல்கலைகழகம் செல்லவுள்ள 14 மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் இரு பெரும் விழாக்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2022
Rating:

கருத்துகள் இல்லை: