தற்கொலைகளை தடுக்க வழி தேடுவோம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு நாட்களுக்கு ஒருவர் தற்கொலை செய்யும் நிலை ஏன்??
2022 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இன்றுவரை சுமார் 180 க்கும் மேற்பட்டோர் இம் மாவட்டத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
இதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்தில் கூட நடைபெறாமலிருந்தது உண்மையில் கவலையளிக்கின்றது.
வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர் ,படித்தவர், பாமரர் என்று பல்வேறு மட்டங்களிலும் இன்று தற்கொலை கலாசாரங்கள் மேலோங்கியிருப்பது நமது மாவட்டத்திற்கு நல்லதொரு சகுணமல்ல என்றே தோன்றுகிறது.
ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்துவதால்தான் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான்.
இப்பொழுது எல்லாம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணம் ,
குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சினை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி ,கணவன் மனைவி முறன்பாடு, வறுமை, போதை ,மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
சிறு சிறு காரணங்களுக்கு கூட இவ்வாறனவர்களின் மனசு உடைந்து போய் விடுவதற்கான காரணங்களை கண்டறிய தடுமாறுகிறோம்.
தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லாருக்கும் உடனே வருவதில்லை. பிரச்சினைகளை எப்படி கையாளுவது என்று தெரியாமல் குழம்பும் போது யாரும் அரவணைக்க, தோள் கொடுக்க இல்லாமல் தனிமையில் வாடும் சமயத்தில் இம் மாதிரியான முடிவை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
உங்களிடம் யாராவது "வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு" என்று சொன்னால் அதன் பாரதூரம் அறியாமல்
அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறி தான்.
மனதில் ஏற்படும் விரக்தி, கோபம்,தற்கால பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கையை பற்றிய பயம் என்பவைதான் அவர்களை இப்படி பேச வைக்கிறது .
சரி உங்க நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ ஏன் உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம் இப்படி ஒரு முடிவெடுக்க போகிறார்கள் என தெரிந்தால் என்ன செய்வீர்கள்?
கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம்.. அவர்களிடம் மனம் விட்டு பேசுவோம், ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முயற்சிப்போம்.
நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதைத் தடுக்கும் முயற்சியில், நாம் இறங்கவில்லையென்றால் மாவட்டத்தின் நிலைமை என்னாவது??
அரச , அரச சார்பற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொலிசார் இது தொடர்பாக கலந்தாலோசித்து தற்கொலை முயற்சியிலிருந்து மக்களை பாதுகாக்க வழிகோலுங்கள்.
( மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் இணைப்பாளர், MSM நஸீர்.)
தற்கொலைகளை தடுக்க வழி தேடுவோம்!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 01, 2023
Rating:

கருத்துகள் இல்லை: