Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

"13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி" சமூக நீதிக்கான கற்கை மையத்தின் ஆய்வரங்கம்

"13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி" என்ற தலைப்பிலான ஆய்வரங்கமானது வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்விற்கான மையத்தில் (WERC) சமூக நீதிக்கான கற்கை மையத்தின் (Academy for Social Justice) ஏற்பாட்டில் நடைபெற்றது,

சமூக நீதிக்கான கற்கை மையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) சிராஜ் மஷ்ஹூரின் தலைமையிலும் சமூக நீதிக்கட்சியின் தலைவர் நஜா முஹம்மதின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இவ்வாய்வரங்கில், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சமூக - அரசியல் செயற்பாட்டாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

சமூக நீதிக்கான கற்கை மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சகோ.சிராஜ் மஷ்ஹூர் தமது வரவேற்புரையில், முஸ்லிம் சமூகத்தில் அரசியல் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு குறித்த நிலைப்பாடுகளை எட்டுவதற்கு பல முயற்சிகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் சமூக நீதிக்கான கற்கை மையம் ஊடாக முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகள் மாத்திரமல்லாது எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தீர்வுகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு ஆய்வு மையமாக சமூக நீதிக்கான கற்கை மையத்தினை நகர்த்திச்செல்வதே தமது இலக்கு என்று குறிப்பிட்டார்.

ஆய்வரங்கை நெறிப்படுத்திய சமூக நீதிக் கட்சியின் தலைவர் சகோ.நஜா முஹம்மத், 'சமூக நீதிக்க கட்சியின் ஆய்வுப் பிரிவாக செயற்படும் சமூக நீதிக்கான கற்கை மையம், கட்சி அரசியலுக்கு அப்பால் பரந்துபட்ட தளத்தில் சகலரையும் உள்வாங்கி செயற்படும் ஒரு பொதுத் தளமாக அமையவ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் இன்றைய நிகழ்வும் உங்கள் அனைவரதும் வருகையும் எமது ஆய்வு மைய உருவாக்கத்தின் நோக்கத்தினை நிறைவு செய்துள்ளது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு சமூக நீதிக்கான கற்கை மையத்தின் செயற்பாடுகளை முன்னோக்கி நம்பிக்கையோடு நகர முடியும் என்ற உத்வேகத்தை தந்துள்ளது' எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ், 13 ஆம் திருத்தச்சட்டம் மற்றும் அதன் முழு அமுல்படுத்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள சாதக பாதகங்கள் குறித்து சுருக்கமாக தனது அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இவ்வாய்வரங்கத்தின் முதலாவது சுற்றில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி அனீஸ் ஷரீப், கிண்ணியா மஜ்லிசுஸ் சூறாவின் செயலாளரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற பதிவாளருமான நியாஸ், சமூக நீதிக்கான கற்கை மையத்தின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் தமது பார்வைகளை முன்வைத்தனர்.

இரண்டாவது சுற்றில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன் 13 குறித்த தமது அனுபவ பகிர்வை முன்வைத்தார். மூன்றாவது சுற்றில் பாராளுமன்ற சிரேஷ்ட ஆய்வாளர் அஜ்வதீன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அரசியல் செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ், அரசியல் செயற்பாட்டாளர் வஸீர் முக்தார், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுஹைர், சிரேஷ்ட சட்டத்தரணியும் முன்னாள் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான ஜாவித் யூஸுப்,

சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக், சமூக செயற்பாட்டாளர் மாஸ் எல். யூஸுப், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பஸ்லான் முஹம்மத், முசலி பிரதேச சபை உறுப்பினர் சட்டமானி முஜிபுர் ரஹ்மான் மற்றும் சமூக நீதிக் கட்சியின் பிரதித்த தவிசாளர் ரிஸானா சிமாஸ் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஆய்வரங்கமானது சமூக நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி றுடானி ஸாஹிரின் நன்றியுரையோடு நிறைவு பெற்றது. இவ்வாய்வரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சிரேஷ்ட சட்டத்தரணி முனீர், அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ், வைத்தியர் மரிக்கார், அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத், இளநெஞ்சன் முர்ஷிதீன் போன்ற பலர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வரங்கத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்த முஸ்லிம் சமூகத்தின் நிலையான ஒரு நிலைப்பாட்டிற்கான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆய்வரங்கத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், ஒரு நிலைப்பாட்டு அறிக்கையாக வெளியிடப்படல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாதம் தமது முதல் நிகழ்வாக "மலையகம் 200" ஆய்வரங்கித்தினை ஏற்பாடு செய்திருந்த நிலையில், "13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி" என்ற தலைப்பிலான ஆய்வரங்கமானது சமூக நீதிக்கான கற்கை மையத்தின் இரண்டாவது நிகழ்வாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி" சமூக நீதிக்கான கற்கை மையத்தின் ஆய்வரங்கம் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 08, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.