தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு
இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு புதிய தற்காலிகக் குழு ஒன்று கடந்த 07 ஆம் திகதி அமைக்கப்பட்டது.
தேசிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் தேசியத் தேவைகளின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் (NASTEC) தலைவர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ ஆகியோர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் 20 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைப்பதும், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவகையில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சி முன்னுரிமைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை ஊக்குவிப்பதும் இந்தக் குழுவின் ஏனைய முக்கிய பணிகளாகும்.
இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்ட, தனித்தனியாக பிரிந்த கட்டமைப்பாக செயல்பட்டு வந்ததோடு பெரும்பாலும் பொருளாதார விரிவாக்கம் அல்லது சமூக முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.
இந்தக் குழுவை நிறுவுவதன் மூலம், தொடர்புள்ள தரப்பினர்களிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், நிறுவன அறிக்கைகள் மற்றும் தேசிய ஆய்வுகள் மூலம் கீழ்மட்டத்திலிருந்து அமைச்சு மட்டம் வரை மிகவும் செயற்திறனான, மூலோபாய மற்றும் சமூக தேவைகளுக்குப் பதிலளிக்கக்கூடிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை உருவாக்க எதிர்பார்க்கிறது.
மேலும் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பது மற்றும் நிதி பொறுப்புக்கூறல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை வரை விஸ்தரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: