இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் அண்மையில்(17) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, ILO அமைப்பின் நாட்டுப் பணிப்பாளர் திருமதி ஜோனி சிம்ப்சன் (Joni Simpson), பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களுக்கு விளக்கமளிக்கையில், அரச துறையில் 63 பணியிட மன்றங்களை (Workplace Forums) நிறுவுவது குறித்து கருத்துக்களை முன்வைத்தார்.
இதன் மூலம் ஊழியர்-நிர்வாக உறவுகள் வலுப்பெறும் அதேவேளை, தொழில் அமைதி, பாலின சமத்துவத்தை உள்ளடக்குதல் மற்றும் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல் என்பன எதிர்பார்க்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
அரச துறையின் தொழிற்சங்கங்களில் 84 சதவீதத்தை உள்ளடக்கிய, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட "தொழில் பிணக்குகள் தொடர்பான தேசிய தரவுத்தளம்" (National Database on Industrial Disputes) எனும் மேகக்கணிமை சார்ந்த (cloud-based) தளத்தை உருவாக்குவதற்கு அமைச்சு மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபடுபவர்களை கொள்கை வகுப்பில் உள்வாங்கும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களுக்கு அமைச்சின் ஒத்துழைப்பை பாராட்டிய திருமதி சிம்ப்சன், இந்த பொறிமுறைக்கு சட்ட ரீதியான அடிப்படையை உருவாக்கி அதன் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், அரச துறையில் துறைசார்ந்த மற்றும் தேசிய மட்டத்திலான மன்றங்களை நிறுவுவதற்கு அமைச்சின் தலைமைத்துவத்தை கோரினார்.
அத்துடன், முன்னெடுக்கப்படும் தலையீடுகளின் வேகத்தைத் தக்கவைக்கவும், அவற்றின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மாற்றுத் தகராறு தவிர்ப்பு மற்றும் தீர்வு வழிமுறைகளைச் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்துவதன் (legal anchoring) அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
"அமைதி மற்றும் நெருக்கடித் தடுப்பிற்கான சமூக உரையாடல்" (Social Dialogue for Peace and Resilience) எனும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இத்திட்டத்தின் நோக்கம், தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான சமூக உரையாடல் மற்றும் தகராறு தீர்வு பொறிமுறைகள் மூலம் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதியான தீர்வுகளை ஊக்குவிப்பதாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), யுனெஸ்கோ (UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் SDG நிதியம் நிதி வழங்குகிறது. அத்துடன் கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் அமைதி கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் கூட்டு SDG நிதியம் என்பன இதற்கு ஆதரவளிக்கின்றன.
இந்த வேலைத்திட்டம் குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, இதற்கான அரசாங்கத்தின் தலையீடு மற்றும் எதிர்கால உத்திகளை வழங்க ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட வேண்டிய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் விதம் குறித்து மிக விரைவில் கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோகபண்டார மற்றும் ILO திட்ட மேலாளர் திருமதி பிரமோதினி வீரசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: