Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையின் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு IMF ஆதரவு!

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு மூலம் விரைவான அபிவிருத்தி மற்றும் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்தார்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், அனர்த்தத்திற்குப் பின்னரான நிவாரண வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வரும் நேரத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவு குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜிவா வருத்தம் தெரிவித்ததோடு, இலங்கையின் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

ஆயுத மோதல்கள், சுனாமிப் பாதிப்புகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், தொற்றுநோய்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு ஒரு புதிய பொருளாதார ஊக்கத்தின் அவசியத்தையும், வீடுகள், காணி, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளை முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டியதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அவசர நிதி உதவியை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான பங்களிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் நன்மைகளை உறுதிப்படுத்தும் என்றும், எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு இந்த வேலைத்திட்டத்துடன் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இங்கு மேலதிகமாகச் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்துறையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் கிராமிய பொருளாதார மாற்றத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், காணி உரிமை மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாத்து கிராமப்புறங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவதற்கும் ஒரு இடைக்கால மூலோபாய வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அபிவிருத்திப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.

அத்துடன், இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, ‘டித்வா’ போன்ற பாரிய அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தமைக்கு அந்த பொருளாதார ஸ்திரத்தன்மையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

‘டித்வா’ சவாலின் போது, நாட்டில் இதற்கு முன்னர் இருந்தது போன்று அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒன்றோடு ஒன்று அரசாங்கம் குழப்பிக் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடைந்துள்ள இந்தப் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் அடுத்த இலக்கு எனத் தெரிவித்தார்.

மேலும், அனர்த்த நிலைமையினால் நாட்டின் கிராமப்புற குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும், அவர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் மனித வள மேம்பாட்டிற்கும் அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை மேலும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்கு IMF ஆதரவு! Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.