Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பல்கலைக்கழக மாணவர்களுக்கான 55 புதிய விடுதித் திட்டம்: முதலாவது கட்டடப் பணி வவுனியாவில் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (22.08.2026) சிறப்பாக நடைபெற்றது.


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் கௌரவ பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்தில் (பம்பைமடு) நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், கல்விப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,

“நாங்கள் கல்வியில் முதலீடு செய்யும்போது, கல்வித் தரத்தில் மட்டுமன்றி ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றாக மாணவர் மற்றும் பணியாளர்களின் நலனும் அமைய வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

எமது இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற போது தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தங்குமிட வசதி, சிற்றுண்டிச்சாலைகள் போன்ற போதிய வசதிகளின்மையால் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது தெளிவாகத் தெரிந்தது.

இந்தப் பின்னணியில்தான், 2026ஆம் ஆண்டில் முழு பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கும் ஒரு விடுதித் திட்டத்தை எம்மால் ஆரம்பிக்க முடிந்தது.

இத்திட்டத்தின்கீழ் கொழும்புக்கு வெளியேயுள்ள, குறிப்பாக மாணவர்களுக்கு மாற்று வழிகள் குறைவாகக் காணப்படும் மற்றும் நகரத்திற்குத் தூரமாக அமைந்துள்ள புதிய பல்கலைக்கழகங்களுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

இதனாலேயே வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுக்கு விசேட கவனமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 55 விடுதித் திட்டங்கள் மூலம் சுமார் 16,000 இளங்கலை மாணவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கான நான்கு புதிய விடுதித் திட்டங்களில், 400 மாணவர்களுக்கான இரண்டு விடுதிகளும், 200 மாணவர்களுக்கான மேலும் இரண்டு விடுதிகளும் அடங்கும். இதன் மூலம் மாணவர்கள் தங்குமிடப் பிரச்சினை இன்றி நிம்மதியாகக் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படும்.

பல்கலைக்கழகம் என்பது கட்டடங்கள் மாத்திரமல்ல; சிறந்த எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான கலாச்சாரமும் அங்கு இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு (Ragging) எவ்வித அனுமதியும் இல்லை என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, மாணவர்களின் ஏனைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியுடன், 231,101,547.65 ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த 200 மாணவர் கொள்ளளவு கொண்ட நான்கு மாடி விடுதிக் கட்டடமானது, வவுனியாப் பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகாலத் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாப் பல்கலைக்கழகம் தனது விடுதித் திட்டத்திற்கான ஏலப்பத்திரம் கோருதல் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளைத் துரிதமாக நிறைவு செய்ததன் பலனாகவே இம்மாபெரும் திட்டத்தின் முதலாவது கட்டடப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான 55 புதிய விடுதித் திட்டம்: முதலாவது கட்டடப் பணி வவுனியாவில் பிரதமர் தலைமையில் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.