ஓய்வை அறிவித்தார் வரலாற்று நாயகன் மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு தனக்கு வேதனையளிப்பதாக இருந்தாலும், இதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்குக் தலைவராக நின்று வழிகாட்டிய 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டிற்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் கைவசம் வைத்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காகத் தனது முழு பங்களிப்பையும் வழங்கிவிட்டதாகவும், இனி வழங்குவதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“காலம் வேகமாக நகர்கிறது, சில அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன. அந்த வகையில் இந்த முடிவு எனது மனதை மிகவும் காயப்படுத்துகிறது. தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எப்போதும் நேசித்தேன், இனியும் நேசிப்பேன்.
என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். மேலும், எனக்குப் பின்னால் பல திறமையான இளம் வீரர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகால நோய்க்கெதிராகப் போராடி வந்த தனது தந்தை ஜோர்ஜ் (Jorge – 68) அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்துத் தான் பரிசீலித்து வருவதாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மெஸ்ஸி கூறியிருந்தார்.
எட்டு முறை ‘பாலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வென்ற மெஸ்ஸி, ஸ்பெயின் அணிக்கு எதிராக அர்ஜென்டினா தோல்வியடைந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 21 அன்றே தனது ஓய்வு பற்றிய பதிவை எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 31, 2026
Rating:
கருத்துகள் இல்லை: