இலங்கை - ஆஸ்திரேலிய வர்த்தக உறவுகள் குறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட “இலங்கை-ஆஸ்திரேலிய வர்த்தக மாநாடு” (Sri Lanka–Australia Business Summit) தொடர்பாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Cassandra Fernando) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இது குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளதுடன், இலங்கை தொழில்முனைவோரின் பங்களிப்பையும் இரு நாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டு வரும் வலுவான உறவுகளையும் பாராட்டியுள்ளார்.
இந்த வர்த்தக மாநாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள கசாண்ட்ரா பெர்னாண்டோ, இலங்கை தொழில்முனைவோரின் தனித்துவமான பங்களிப்பு குறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கிடைத்தமை தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய வாய்ப்புகளுக்கு ஆதரவளிப்பதையிட்டு தான் பெருமையடைவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வளர்ச்சியடைவதைக் காண எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 31, 2026
Rating:

கருத்துகள் இல்லை: