Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இட பற்றாக்குறை!


ஒட்டமாவடி சூடுபத்தின சேனையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் இனி அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் 700 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யக்கூடிய இடம் உள்ளது என ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப் படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஒட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை பகுதியாகும். இந்த பொது மயானத்திலே உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை எமது சபை பொறுப்பேற்று மனித வலு, இயந்திர வலு என்பவற்றைப் பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 03 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் உடல்களை அடக்கம் செய்து வந்த நிலையில், இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் அனைத்து சமூகங்களுடைய உடல்களையும் அடக்கம் செய்து வருகின்றோம்.

இதுவரையில் 1,279 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த 5 ஏக்கர் காணியிலேயே இன்னும் சுமார் 700 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்ய முடியும். இருந்த போதும் தற்போது கொவிட்டின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியிலிருந்து வருவதன் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் இந்த இடம் முடிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த இடம் தொடர்பாகக் கடந்த 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபர் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

எனவே நாட்டில் கொவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேறு எங்கும் ஒழுங்கு செய்யப்படாத நிலையிலே இந்த ஒட்டமாவடி பிரதேசத்தில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில் இது முடிவுறும் போது இந்த இடத்தில் மேலும் இடத்தை பெற்றுக்கொள்ள முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நாட்டில் வாழுகின்ற எல்லோரதும் பொதுவான பிரச்சனை. எனவே இந்த இடம் முடிவுறுகின்ற போது மாற்று இடத்தை எல்லோருமாகச் சேர்ந்து பெறவேண்டிய பொறுப்பு இருக்கின்றது .

நாட்டிலே எந்த பாகத்தில் இருந்தாலும் தேடி அதனை அடையாளப்படுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சமயத்தலைவர்கள் எல்லோரிடமும் இருக்கின்றது என்ற அடிப்படையில் எல்லோரும் செயற்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.. 
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இட பற்றாக்குறை! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 05, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.