Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மக்கள் ஆணையை இழந்த பாராளுமன்றத்தைக் கலைத்து, உடனடியாக தேர்தலுக்குச் செல்லுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை.

தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கமும்  ஜனாதிபதியும் மக்கள் ஆணையை இழந்த அரசாங்கமாகும். எனவே, உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கோருகிறது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று 31.10.2022 திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்றது. இதன்போது  NFGGயின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்  "தனிநபர்களின் தேவைகளுக்காகவே காலத்திற்குக் காலம் அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே இன்று 21A என்கின்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் கடந்த பல மாதங்களாக நடாத்திய  போராட்டங்களின் மூலம் மொத்த அரசியல் முறைமையையும்  மாற்றக்கூடிய சமூக நல அரசியல் யாப்பு மாற்றத்தையே கோரியிருந்தனர். அவர்கள் ஜனாதிபதியை,பிரதமை மாத்திரமன்றி  நாடாளுமன்றத்தையே கலைத்து புதிய அரசியல் சீர்திருத்தத்தை செய்யும்படியே கோரியிருந்தனர்.

எனினும்  கண்துடைப்பிற்காக ஒரு சில மாற்றங்களை மாத்திரம்  செய்து மீண்டும் தங்களது அரசியல் நலன்களை பாதுகாக்கும் யாப்பு சீர்திருத்தங்களையே தற்போதைய அரசாங்கமும் கொண்டு வந்துள்ளது.. எனவே மக்கள் ஆணை இல்லாத இப்பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.

அத்துடன் நாடு இன்று பொருளாதார ரீதியில்  பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற போது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு தன்னிடம் பல திட்டங்கள் இருப்பதாக கூறியிருந்தார் .உல்லாசப் பயணத் துறையை அபிவிருத்தி அடையச் செய்வதன் மூலமும் IMF  கடனுதவிகளை பெற்றுக் கொள்ளவும் தன்னால் முடியும் என அவர் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் அவர் பதவியேற்று பல மாத காலங்கள் கடந்துள்ள நிலையில் எதிர்பார்த்த உல்லாசத்துறை வருமானங்களோ IMF கடனுதவிகளோ கிடைக்கப்பெறவில்லை.
நாட்டின் இன்றைய பின்டைவுக்கு வழிவகுத்த காரணங்களில் ஒன்று
முன்னாள் அரசாங்கம் அளித்த வரி சலுகையும் ஆகும். ஆனால் அவ்வரிச்சலுகையினால் பொதுமக்கள் அன்றி பெரும் பெரும் நிறுவனங்களே  இலாபங்களை ஈட்டியிருந்தன. எனினும் தற்பொழுது அந்நிறுவடங்களிடம் செலுத்தத் தவறிய வரிகளை  மீள செலுத்துமாறு பணிக்காத  அரசாங்கம், எந்தவித நியாயமான அடிப்படைகளும் இன்றி மக்களின் வரிச் சுமைகளை மீண்டும் அதிகரித்து அவர்களின் அன்றாட வாழ்க்கையினை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அது போலவே  உல்லாசப் பயணிகளை கவரும் விதமாகவோ, அத்துறையினை  அபிவிருத்தி செய்யும் வகையிலோ எவ்வித திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.இதனால்உல்லாசப்பயணத்துறையும் வீழ்ச்சியடைந்து டொலர் கையிருப்பு மிகக் குறைவடைந்துள்ளது .பங்களாதேஷ்., இந்தியா போன்ற நாடுகளும் கூட எமது நாட்டு வங்கிககளுடனான தொடர்புகளை நிறுத்தியுள்ளன.

எனவே இந்த பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு ஆங்காங்கே பொருத்துக்களை போடுகின்ற திட்டங்களை விடுத்து ஜனாதிபதி முழுமையான தீர்வினை காணக்கூடிய திட்டங்களை வகுக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது

அத்துடன்,நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சில காலங்களுக்கு மாத்திரம் நடைமுறையில் இருக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட  பயங்கரவாத தடைச் சட்டமானது, பிற்பட்ட காலங்களில் குறித்த 'ஷரத்து' மிக லாவகமாக நீக்கப்பட்டு  நிலையான சட்டமாக இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் இதன் மூலம்  தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  பிற்பட்ட காலங்களில் முஸ்லிம்களும்  தற்பொழுது இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுகின்ற  எவராக இருப்பினும் அவர்களை கைது செய்வதற்கு வசதியான ஒரு சட்டமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே இச்சட்டத்தில்  திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக இச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் நல்லாட்சிகான தேசிய முன்னணி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றது  " எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வூடக சந்திப்பின்போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் டொக்டர் ஸாஹிர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் ALM.சபீல் (நளீமி) மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பி.எம். முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மக்கள் ஆணையை இழந்த பாராளுமன்றத்தைக் கலைத்து, உடனடியாக தேர்தலுக்குச் செல்லுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 04, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.