Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் அதிகரிக்கும் யாசகப் பிரச்சினை: கருணைசார் ஒழுங்குமுறைக்கான தீர்வுத் திட்டம்


(மர்சூக் காசிம்)

அறிமுகமும் பிரச்சனையின் ஆழமும்.

கடந்த சில ஆண்டுகளாக, இலங்கையின் பல பகுதிகளில் காணப்படுவது போலவே, காத்தான்குடி நகரிலும் தெருக்களில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சந்தைப் பகுதிகள், மஸ்ஜித்கள், வங்கிகள், மற்றும் பிரதான போக்குவரத்து சந்திகள் என எங்கு நோக்கினாலும் கையேந்தி நிற்பவர்களைக் காண முடிகிறது.

இஸ்லாம் தர்மம் செய்வதை (ஸதகா) மற்றும் ஏழைகளுக்கு உதவுவதை வலியுறுத்துகிறது என்றபோதிலும், தற்போதைய களநிலைமை, தனிப்பட்ட கருணையையும் சமூக ஒழுங்கையும் சமன் செய்யும் வகையில், முறையான திட்டமிடலுடன் கூடிய நிர்வாகத்தை (Structured Management) அவசியமாக்கியுள்ளது.  

தற்போதைய சவால்களின் பன்முகப் பரிமாணங்கள்

காத்தான்குடியில் யாசகர்கள் அதிகரிப்பதற்குப் பின்னால் பல சமூக, பொருளாதார மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சவால்கள் உள்ளன:

1. திட்டமிட்ட மற்றும் குழுச் செயல்பாடுகள்: 

பலர் பஸ்கள் மூலம் வெளியூர்களில் இருந்து குழுவாக வருகை தருவதாகக் சொல்லப்படுகின்றது. இது யாசகம் என்பது தனிப்பட்ட வறுமையின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் இலாப நோக்கிலான செயல்பாடு என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

2. வற்புறுத்தல் மற்றும் சமூக இடையூறு: 

சில யாசகர்கள் வலுக்கட்டாயமான அணுகுமுறையைக் கையாள்கின்றனர். குறிப்பாக, வாகனங்களில் பயணிப்போர், இரவு நேர Street Food Court பகுதிகளில் உணவு உண்ணும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் சமூகச் சிக்கலாக மாறியுள்ளன.

3. வியாபாரிகளின் தர்மசங்கடம்:  

வியாழக் கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் வரும் யாசகர்களினால்  மெயின் வீதி மற்றும் கடற்கரை வீதி கடை உரிமையாளர்கள் பாரிய தர்ம சங்கடங்களை      எதிர்கொள்கின்றனர். வியாபாரத்தைப் பார்ப்பதா, வரிசையில் நிற்கும் யாசகர்களுக்குப் பதிலளிப்பதா என்ற நிலைமை, வர்த்தக நடவடிக்கையைப் பாதிக்கிறது.

4. உண்மையான தேவையுள்ளோர் vs. ஏமாற்றுவோர்: 

யாசகர்களில் உண்மையில் உதவி தேவைப்படும் நிராதரவான ஏழைகளும், நோயாளிகளும் இருக்கிறார்கள். இவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் இருந்தோ அல்லது உழைக்கக்கூடிய திறன் இருந்தும் பிச்சை எடுப்போரிடமிருந்தோ வேறுபடுத்துவது கட்டாயத் தேவையாகும்.

இஸ்லாமியப் பார்வை: உழைப்பும் தன்மானமும்

இஸ்லாம், ஸகாத் மற்றும் ஸதகா மூலம் ஏழைகளுக்கு உதவுவதைக் கடமையாக்கும் அதே வேளையில், வேலை செய்யக்கூடிய உடல் திறன் உள்ளவர்கள் பிச்சை எடுப்பதை வன்மையாகத் தடை செய்கிறது.   

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் கூற்றுப்படி, “மேலே உள்ள கை கீழே உள்ள கையினைவிட சிறந்தது,” (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அதாவது, கொடுக்கும் கை வாங்கும் கையை விட மேன்மையானது. 

இதன்படி, மனிதர்களை சுயமரியாதை கொண்டவர்களாகவும், உழைக்கும் திறன் கொண்டவர்களாகவும், சுயநிறைவு அடையச் செய்வதையுமே இஸ்லாம் வழிகாட்டுகின்றது

அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் பகுதி பின்வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறாரோ, அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த ஹதீஸ், உழைத்து, பிறரிடம் கையேந்தாமல், தன்மானத்துடன் வாழ முயற்சிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்பதையும், அவர்களுக்கு உதவுவான் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

பிரச்சினையைத் தீர்க்க ஒரு பல்துறை சார்ந்த தீர்வுத் திட்டம்

யாசகப் பிரச்சினையைத் தீர்க்க நகரசபை, வர்தக  சங்கம், சம்மேளனம், மஸ்ஜித் நிர்வாகங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு பன்முகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

1. சட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு

பகுதிக் கட்டுப்பாடு: நகரசபையும் பொலிஸாரும் இணைந்து கடற்கரை, புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் Street Food Court, போக்குவரத்து சிக்னல்கள் போன்ற சுற்றுலா மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் யாசகம் பெறுவதை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.

ஒழுங்கமைக்கப்பட்டோர் மீது நடவடிக்கை: வெளியூர் பகுதிகளில் இருந்து குழுவாக வரும் யாசகர்களைக் கண்காணித்து, அவர்களை யாசகர்கள் கட்டளைச் சட்டம் (Vagrants Ordinance) மற்றும் குற்றச் சட்டம் (Penal Code) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. வர்த்தக சங்கம் சார்ந்த நிதி ஒழுங்குமுறை (பிரதான தீர்வு)

யாசகர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பதைத் தடுத்து, அதற்கான பணத்தைத் திரட்டி முறையாக வழங்குவதற்கு, காத்தான்குடி  வர்த்தக  சங்கம் ஒரு முக்கியப் பங்காற்ற வேண்டும்.

நேரடிப் பணம் வழங்கத் தடை: மெயின் வீதி மற்றும் கடற்கரை வீதியில் உள்ள தனிப்பட்ட வியாபாரிகள் நேரடியாக யாசகர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்க, சங்கம் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

"சமூக நல பங்களிப்பு நிதி" (Social Welfare Contribution Fund): வர்த்தக சங்கம் இந்தக் கடை உரிமையாளர்களிடமிருந்து வாராந்த அல்லது மாதாந்த அடிப்படையில் ஒரு சிறு தொகையைப் பெற்று, பிரத்யேக நல நிதியை உருவாக்க வேண்டும்.

நிதி சேகரிப்பின் ஆழமான பார்வை புள்ளிவிவர மதிப்பீடு (அண்ணளவானது)

பிரதான வீதி, கடற்கரை வீதியில் கடைகளின் எண்ணிக்கை ~ 800 (சுமார் 1300 வணிக பதிவுகளில் இருந்து)

தனிநபர் கடைக்காரர் வாராந்த தர்மம் - LKR 700 (ஒரு மதிப்பீடு)

ஒரு கடைக்காரரின் மாதாந்த தர்மம் 700 x 4 = LKR 2,800

காத்தான்குடியில் மாதாந்திர மொத்த தர்மத்தின் மதிப்பு - 800 x 2,800 = LKR 2,240,000 (2.24 மில்லியன்)

முடிவு: தனிப்பட்ட ரீதியில் சிதறிச் செல்லும் இந்த 2.24 மில்லியன் ரூபாயை ஒரு பொறிமுறையின் கீழ் கொண்டு வந்து, பதிவு செய்யப்பட்ட உண்மையான தேவையுடையோருக்கு மாதாந்த நிதியுதவி, உணவுப் பங்கீடுகள் அல்லது மருத்துவ உதவிகளாக வழங்கினால், அது ஒரு மாபெரும் சமூக நலத் திட்டமாக அமையும். 

இந்த நிதியை நிர்வகிக்க வர்த்தக சங்கம் விழித்துக்கொள்ளுமா?

3. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு வங்கி

வேலைவாய்ப்பு வங்கி (Job Bank): வர்த்தக சங்கம் ஒரு 'வேலைவாய்ப்பு வங்கியை' உருவாக்கி, வேலை செய்யக்கூடிய திறன் உள்ள யாசகர்களுக்கு நேரடியாக உதவ வேண்டும். துப்புரவு செய்தல், பொருட்களைப் பொதி செய்தல், சுமந்து செல்லுதல் அல்லது அடிப்படை பாதுகாப்புப் பணிகள் போன்ற குறைந்த திறன் தேவைப்படும் சிறு வேலைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.

பயிற்சி வாய்ப்புகள்: வேலை தேவைப்படுபவர்களுக்குக் குறுகிய கால திறன் பயிற்சி அல்லது வேலை வழிகாட்டுதலை (Apprenticeships) வழங்க சமூக அமைப்புகளுடன் சங்கம் இணைந்து செயல்பட வேண்டும்.

4. மறுவாழ்வு மற்றும் ஆதரவு மையங்கள்

மருத்துவம் மற்றும் மறுவாழ்வு: மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் அல்லது போதைப்பொருள் பழக்கமுள்ளோருக்காக மறுவாழ்வு (Rehabilitation) மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்கள் நிறுவப்பட வேண்டும். இந்தச் சேவையை காத்தான்குடி சம்மேளனம் தனது சேவைப் பரப்பில் உள்ளடக்க வேண்டும்.

5. தேவைப்படுவோரை இனங்காணல் (பதிவு மற்றும் சரிபார்ப்பு)

நகரசபை, சம்மேளனம் சமூக சேவை அதிகாரிகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் இணைந்து உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு, தேவைக்கான அளவுகோலின் அடிப்படையில் அவர்களைப் பதிவு செய்ய வேண்டும். இது, நேர்மையான தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே உதவி சென்றடைவதை உறுதி செய்யும்.

முடிவாக: கருணையுடன் கூடிய ஒழுங்கான சமூகம்

யாசகம் கேட்பவர்களை முழுமையாகப் புறக்கணிப்பது அல்ல, மாறாக, அவர்களுக்கு மரியாதையுடனும், ஒழுங்கான வழியிலும் உதவுவதுதான் காத்தான்குடி சமூகத்தின் இலக்காக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, இஸ்லாமிய தர்ம போதனைகளை சமூக ஒழுங்கு மற்றும் நலனுடன் இணைக்கும்போது, காத்தான்குடி ஒரு கருணை, நேர்மை மற்றும் சுயநிறைவு மிக்க மாதிரி சமூகமாக நிச்சயமாக உயர முடியும். 

தெருவில் யாரிடமும் திடீரெனப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, உண்மையாக தேவைப்படும் மக்களுக்கு முறையாக, திட்டவட்டமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வோம். இதன் மூலம், ஒவ்வொரு குடிமகனும் மரியாதையுடனும் சுயநிறைவுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.
காத்தான்குடியில் அதிகரிக்கும் யாசகப் பிரச்சினை: கருணைசார் ஒழுங்குமுறைக்கான தீர்வுத் திட்டம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 22, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.