_large.jpg)
2026 ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கிடையிலான விடயதானங்களை ஒருங்கிணைக்கும் மாநாடு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் பங்கேற்புடன், (06) நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது முந்தைய கூட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்டத்திலான முன்னேற்றம் என்பன மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது, மாகாண சபைகளினால் நேரியல் அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், மிகவும் பயனுள்ள அபிவிருத்திச் செயன்முறைக்காக அவசியமான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிட்டியது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய அரச நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் குறிப்பாக மாகாண சபைகளுக்குச் சொந்தமான வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புவதில் பெரும் சவால் காணப்படுவதாகவும், கூட்டு முயற்சியுடன் செயற்பட்டால் அந்தச் சவால்களை முறியடித்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
"2025 ஆம் ஆண்டிற்காக நாம் சில பணிகளை முன்னெடுத்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எமக்கு இருந்த மிக முக்கிய பிரச்சினை, ஒதுக்கீடுகளை எவ்வாறு ஆகக்கூடிய பயனுள்ள முறையில் பயன்படுத்துவது என்பதுதான். அந்தச் செயல்முறையை கணிசமான அளவிற்கு வெற்றிபெறச் செய்ய எம்மால் முடிந்தது.
ஆனால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால், தெற்கு மாகாணத்தைத் தவிர ஏனைய பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டன. அதனால், திட்டமிடப்பட்ட சில பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதை நாம் காண்கிறோம். 2026 ஆம் ஆண்டிற்காக 2025 ஐ விட அதிக ஒதுக்கீடுகள் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்திலிருந்தே அந்த ஒதுக்கீடுகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
டிட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் குறிப்பாக மாகாண சபைகளுக்குச் சொந்தமான வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புவதில் பெரும் சவால் எமக்குள்ளது. அனர்த்தத்தின் போது உங்களது தலையீட்டினால் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க முடிந்தமைக்காக அரசாங்கத்தின் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்."
மாநாட்டில் உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத் அவர்கள், 2026 ஆம் ஆண்டில் மாகாண மட்டத்திற்கு இதைவிட அதிக ஒதுக்கீடுகள் கிடைக்கும் என்றும், தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியில் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்பட்டு, நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்:
"நாடொன்றாக நாம் மிகவும் தீர்மானம் மிக்க தருணத்தில்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழல் எமது அபிவிருத்தித் திட்டங்களையும் பாதிக்கின்றது. கௌரவ ஜனாதிபதி அவர்கள் அவசர ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் குறித்து நாட்டிற்கும் உலகிற்கும் தெளிவுபடுத்தினார்.
எமது நாடு தீவு தேசமாக, முக்கிய கடல்சார் போக்குவரத்து பாதையில் அமைந்துள்ளதால், உலக அரசியல் அதிகாரப் போட்டிகளின் தாக்கம் நேரடியாகவே உணர்கிறது. எமக்கிருப்பது சிறிய பொருளாதாரமாக இருந்தாலும், மனிதாபிமானமுள்ள அரசாக, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக செயற்படுவதற்கு நாம் தீர்மானித்தோம்.
அதன்படிதான், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஈரானிய கடற்படைக் குழுவினருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாம் தீர்மானித்தோம்.
கடந்த ஆண்டு தேர்தல்களின் காரணமாக அபிவிருத்தித் திட்டங்களுக்காக எமக்குக் கிடைத்தது ஐந்து அல்லது ஆறு மாதங்கள் போன்ற குறுகிய காலம் மட்டுமே. அதிகாரிகளின் பற்றாக்குறைக்கு மத்தியிலும் இவ்வளவு பெரிய பணியைச் செய்ய முடிந்தமை ஒரு அற்புதத்தைப் போன்றது."
இந்த மாநாட்டில் அரச நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.
ஆலோகபண்டார உட்பட அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, நிதி ஆணைக்குழு, வரவு செலவுத் திட்ட திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், மதிப்பீட்டுத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை: