சட்டவிரோதமாக இரண்டு சம்பளங்கள் பெறும் அரச பாடசாலை ஆசிரியர்கள்
“நான் அபேகோன் செனவிரத்ன (வயது65) எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவரும் பாடசாலைக் கல்வியை தொடரும் மாணவர்கள். மனைவி எஸ்.ஜே.மல்லிகா கடந்த பல வருடங்களாக பாரிச வாத நோயினால் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வருவள்.தரம் 5 மற்றும் தரம் 7 மற்றும் தரம் 10 ஆகிய வகுப்புக்களில் கல்வியைத் தொடரும் எனது பிள்ளைகளின் மேலதிக வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்தும் நோக்குடனே நாட்டாமை தொழிலுக்கும் மேலதிகமாக பாரிய சிரமங்களுக்கு மத்தியிலும் இரவு நேர காவலாளியாக தோட்டத்தில் வேலை செய்து வருகிறேன்” என அபேகோன் தனது பிள்ளைகளுக்கான கல்விச் செலவினங்களை பற்றி விபரிக்கிறார்.
அபேகோன் குறிப்பிடுவது போல ஐத்தாம் தரத்தில் படிக்கும் அவனது மகன் யசோதர் மற்றும் மூத்த பிள்ளைகளான அருள் உட்பட விமுக்த்தி ஆகிய மூவரும் படிப்பில் மிகவும் திறமை மிக்கவர்கள். தாயின் நேரடி வழிகாட்டலில் பாடசாலைக் கல்வியை ஆரம்பித்த அவர்கள் தாய் சுகயீனமுற்றதன் பின்னர் பாடசாலையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களுக்கு சென்றே பாடத்திட்டத்தை நிறைவு செய்ய
கடமைப்பட்டுள்ளனர்.
பிள்ளைகள் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ள அவர்களின் தந்தை அபேகோனும் தனது களைப்பையும் வயோதிபத்தையும் ஒரு பொருட்டாக நோக்காமல் வாரத்தில் ஆறு நாட்கள் நாட்டாமை தொழிலுக்கு மேலதிகமாக இரவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
பெல்மடுல்ல மகிந்த மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடரும் மேற்படி மூன்று பிள்ளைகளுக்கும் பாடசாலையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களுக்காக மாதமொன்றிக்கு 3500 ரூபாவும் சனி ஞாயிறு தினங்களில் தமது பாடசாலை ஆசிரியர்களின் பிரத்தியேக வகுப்புக்களில் கலந்து கொள்வதற்கு மாதாந்தம் 5500 ரூபா செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் சீ.டப்ளியு.டப்ளியு. கண்ணங்கரவினால் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி என்ற சிந்தனை அறிமுகப்படுத்தப்பட்டு அதனை உறுதிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சு பல சுற்றறிக்கைகளையும் செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் மேலதிக வகுப்புக்களுக்காக மாணவர்களிடம் பணம் அறவிடும் செயன்முறை இன்னும் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கைகள் பற்றி பலரும் கதைக்கின்ற போதிலும் உரிய திருப்பங்கள் இன்னும் ஏற்படவில்லை என கல்வி ஆய்வாளர் ஏ.பி.எப். நஸ்லியா தெரிவிக்கிறார்.
2020ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சின் பாடசாலைகள் தொடர்பான புள்ளிவிபரவியல் அறிக்கைக்கிணங்க இலங்கையில் 4063,685 மாணவர்கள் 10155 அரச பாடசாலைகளில் 249,494 ஆசிரியர்களிடம் கல்வி கற்கின்றனர்.
இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமாக வருடாந்தம் பல பில்லியன் ரூபாக்களை திறைசேரியிலிருந்து பெறப்படுகிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி முறை தொடர்ந்தும் பரீட்சை பெறுபேற்றை மாத்திரம் இலக்காகக் கொண்ட கல்வித் திட்டமாக அமைந்திருப்பதால் மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதற்காக பாடசாலையில் கற்பிக்கப்படும் அதே பாடத்தை மேலும் கற்கும் நோக்குடன் மேலதிக வகுப்புக்களை நாட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஏ.எம்.நிஸ்தார் தெரிவிக்கிறார்.
பாடசாலையில் மாணவர்களிடம் நிதி அறவிடுவது தொடர்பில் 2015/5, 2018/26 ஆகிய சுற்றறிக்கைகள் மிகத் தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ள போதிலும் பெரிய நகரப் பாடசாலைகள் உட்பட பல கிராமியப் பாடசாலைகளில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களுக்காக தரம் 3 முதல் தரம் 13 வரையான மாணவர்களிடமிருந்து 50 ரூபா முதல் 3000 ரூபா அறவிடப்பட்டுவருவதாக முன்னாள் அதிபர் நிஸ்தார் மேலும் தெரிவிக்கிறார்.
உமது பாடசாலை எந்த அளவுக்கு தரமானது? என்ற கல்வி அமைச்சின் வழிகாட்டல் கைநூலிற்கிணங்க மாணவர் அடைவு மட்ட மேம்பாடு தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகம் கூடிய கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளனர்.
இதனை சாதகமான வாய்ப்பாகக் கருதி பல பிரதான பாடசாலைகள் மற்றும் கிராமியப் பாடசாலைகள் பலவும் புலமைப் பரிசில் பரீட்சை,க,பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த.உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் என்ற பெயரில் பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளதாக நாவலகந்த மகா வித்தியாலய பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் நாம் பல தடவைகள் கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம். எனினும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் ஆரம்பிக்கவில்லை என அப்பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தமது பாடாசாலை ஆசிரியர்களை பயன்படுத்தியும் வெளிப் பாடசாலை ஆசிரியர்களை பயன்படுத்தியும் நடத்திவரும் மேற்படி மேலதிக வகுப்புக்களுக்கு மாணவர்களிடமிருந்தே ஆயிரக்கணக்கில் பணம் அறவிடும் சட்ட விரோதமான செயலை மாணவர் அடைவு மட்ட அபிவித்திக்கான வேலைத்திட்டங்கள் என்ற போர்வையில் காலாகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை நேரங்களைத் தவிர்த்து ஏனைய நேரங்களில் பாடசாலை வளங்களைப் பயன்படுத்துவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் உத்தியோகபூர்வ அனுமதியை பெற வேண்டியுள்ளது. எனினும் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாடசாலை நிறைவு பெற்ற பின்னரும் அதிபரின் அங்கீகாரத்துடன் பாடசாலை வளங்களைப் பயன்படுத்தி பணத்திற்கு மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.
பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக அரசு அவர்களுக்கு மாதாந்தம் ஆயிரக்கணக்க்கில் சம்பளங்களை வழங்கி வருகிறது.இந்நிலையில் மீண்டும் அந்த ஆசிரியர்கள் பாடங்களை படிப்பிப்பதற்காக மாணவர்களிடம் பணம் பெற முயற்சிப்பது பாரிய மோசடியாகும்.
இந்தப் பிழையான நடைமுறையை முற்றாக ஒழிக்கப்படும் வரை இலவசக் கல்விக் கொள்கையை பாதுகாக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவிக்கிறார்.
கஹவத்தை கோட்டக் கல்விப் பிரிவிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வியைத் தொடரும் ஒரு மாணவன் தனது பாடசாலையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்கள் பற்றி இவ்வாறு தெரிவிக்கிறார்.
தமிழ் வரலாறு கணிதம் ஆகிய பாடங்களுக்கு மேலதிக வகுப்புக்கள் எமக்கு இடம்பெறுகின்றன. ஒரு மணித்தியால மேலதிக வகுப்பிற்கு 50 முதல் 100 ரூபா என்ற அடிப்படையில் எங்களிடம் பாட ஆசிரியர்கள் பணம் அறவிடுகின்றனர்.
பணம் செலுத்த முடியாதவர்களுக்கு மேலதிக வகுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
வகுப்பில் பாட வேளையின் போது முறையாக கற்பிக்காமல் தனது கையடக்க தொலை பேசியில் நேரத்தை சேலவிடும் இவ்வாசிறியர்கள் பாடத்திட்டம் இன்னும் நிறைவு செய்யப் படவில்லை எனக்கூறி மேலதிக வகுப்புக்களுக்கு வருமாறு எம்மை அழைக்கின்றார்கள்.
இது போன்று எங்கள் வகுப்பிற்கு மட்டுமல்ல தரம் மூன்று முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு பணத்திற்கு மேலதிக வகுப்புக்கள் இடம் பெறுகின்றன.
எமது பாடசாலையில் கடந்த பல வருடங்களாக தரம் 11 மற்றும் உயர் தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்திவரும் பல ஆசிரியர்கள் வாகனங்களிலேயே பாடசாலைக்கு வருகை தருகின்றனர்.
நிச்சயம் இவை அனைத்தும் இவ்வாசிரியர்கள் எம்மை ஏமாற்றி முன்னெடுத்துவரும் மோசடிகளின் விளைவுகள்.எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடுவோரின் பதவிகள் பறிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்தும் அம்மாணவன் கருத்து தெரிவிக்கையில் மேலதிக வகுப்பில் கலந்து கொள்ளாத போது பாடசாலை வகுப்பில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
சிலபோது மேலதிக வகுப்பில் கற்பிக்கப்படும் பாடத் தலைப்புக்கள் வகுப்பில் கற்பிக்கப் படுவதில்லை. மேலதிக வகுப்புக்களுக்கு பாடசாலை நாட்கள் உட்பட சனி ஞாயிறு போயா தினங்களிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் சமய வகுப்புக்களில் பங்கேற்கவும்,நண்பர்களுடன் விளையாடுவதற்கும் சந்தர்ப்பம் கிடைப்பதும் இல்லை.சத்தியமாக கூலி வேலை செய்யும் எமது பெற்றோருக்கு எமது மேலதிக வகுப்புக்கள் பெரும் சுமையாக மாறி விட்டன.
கல்வியை வெறுக்கின்ற நிலைக்கு எமது குடும்பம் வந்துவிட்டது என அம்மாணவன் மிகுந்த மனவேதனையுடன் முன்வைக்கிறான்.
கஹவத்தை கோட்டக் கல்வி பணிப்பாளர் நயோமி உதயகாந்தியிடம் பாடசாலையில் பணத்திற்கு மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவது பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதா என அவரிடம் கேட்ட போது
கஹவத்தை கோட்டக் கல்விப் பிரிவிலுள்ள ஒருசில பாடசாலைகளில் தொடர்ச்சியாக பணத்திற்கு மேலதிக வகுப்புக்கள் இடம்பெறுவது பற்றி பலரிடமிரும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வலயப் பணிப்பாளர் ஊடாக குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றோம்.
எனினும் எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளில் உறுதிப்படுத்த முடியுமான சாட்சியங்கள் இல்லாததால் குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளோம் என அவர் தெரிவிக்கிறார்.
பல கிராமிய பாடசாலைகளில் புலமைப் பரிசில் வகுப்பு தரம் 5 மாணவர்களுக்கு படிப்பிக்கும் ஆசிரியர்கள் பலர் மாணவர்களிடம் மேலதிக வகுப்புக்கள் என்ற பெயரில் பணம் அறவிடுகின்றனர்.பெற்றோர்களும் தமது பிள்ளைகள் பரீட்சையில் கூடுதலான புள்ளிகளை பெற வேண்டும் என்பதற்காக ஆசிரியரிடம் பணம் கொடுத்து மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுக்கின்றனர்.
தரம் 5 மாணவர்களுக்கு பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் மேற்படி ஆசிரியர்கள் பரீட்சை நிறைவின் பின்னரும் பல லட்ச ரூபா பெறுமதியான அன்பளிப்புக்களை தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பெறும் தவறான மரபும் இன்னும் பல பாடசாலைகளில் தொடர்கின்றது.
பாடசாலையில் நடைபெறும் விழாக்களிலும் இம்மரபு பின்பற்றப்பட்டு கல்வி அதிகாரிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்கின்றனர் என நிவித்திகல வலய மற்றுமொரு பாடசாலையின் அதிபர் தெரிவிக்கிறார்.
மேற்படி அதிபரின் கருத்து உண்மையா என அறிந்து கொள்ளும் நோக்குடன் தரம் 5 வகுப்பாசிரியர்களின் வீடுகளுக்கு சென்ற போது அங்கிருந்த பெறுமதியான வீட்டுப் பொருட்கள் தொடர்பில் அவர்கள் அளித்த பதில்களை மேற்படி அதிபரின் கருத்தை உண்மைப்படுத்துவதாக அமைந்திருந்தன.
இலங்கையில் இலவசக் கல்வியை உறுதிப்படுத்துவதற்கு புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது.
எனினும் பாடசாலையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்கள் ஊடாக பணம் உழைக்கும் வியாபார முயற்சியை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை போதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள தவறியுள்ளது என கோப் குழுவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக இரண்டு சம்பளங்கள் பெறும் அரச பாடசாலை ஆசிரியர்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 26, 2022
Rating:

கருத்துகள் இல்லை: